/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விற்பனை கூடத்திற்கு கொப்பரை வரத்து அதிகரிப்பு; விலை உயர்வால் விவசாயிகள் ஆர்வம்
/
விற்பனை கூடத்திற்கு கொப்பரை வரத்து அதிகரிப்பு; விலை உயர்வால் விவசாயிகள் ஆர்வம்
விற்பனை கூடத்திற்கு கொப்பரை வரத்து அதிகரிப்பு; விலை உயர்வால் விவசாயிகள் ஆர்வம்
விற்பனை கூடத்திற்கு கொப்பரை வரத்து அதிகரிப்பு; விலை உயர்வால் விவசாயிகள் ஆர்வம்
ADDED : அக் 17, 2024 10:20 PM

உடுமலை : உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு, இ - நாம் திட்டத்தின் கீழ் நடக்கும் ஏலத்திற்கு, கொப்பரை வரத்து அதிகரித்த நிலையில், விலையும் உயர்ந்து காணப்பட்டது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ் நேற்று நடந்த ஏலத்தில், கிலோ, ரூ. 127.12க்கு விற்பனையானது.
இங்கு, வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஏலத்திற்கு, பொள்ளாச்சி, நல்லிகவுண்டம்பாளையம், எலையமுத்துார், விளாமரத்துப்பட்டி, பொன்னாச்சியூர், பணத்தம்பட்டி, வேட்டைகாரன்புதுார், சின்னப்பன்புதுார், கோலார்பட்டி, சின்ன வீரம்பட்டி, புக்குளம், கோட்டமங்கலம், குரல்குட்டை, கொமரலிங்கம், உடுமலை, ஆண்டியகவுண்டனுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 62 விவசாயிகள், 226 மூட்டை அளவுள்ள, 11 ஆயிரத்து, 300 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இ - நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 10 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
முதல் தரம், ரூ.120 முதல், ரூ.125 வரையும், இரண்டாம் தரம், ரூ.75.69 முதல், 118.69 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.
ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: இங்கு கொப்பரைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒன்றரை ஆண்டில், அதிகபட்ச அளவாக, 11 ஆயிரத்து, 300 கிலோ கொப்பரை விற்பனைக்கு வந்தது. அதிகளவு நிறுவனங்கள் பங்கேற்றதால், விலையும் உயர்ந்தது.
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரை முறையாக தரம் பிரித்து, ஏலத்திற்கு பட்டியலிடப்படுவதால், விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
இ - நாம் திட்டத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவித்தனர்.