/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்க இடைவெளி அதிகரிப்பு! திருமூர்த்தி அணை நீர் மட்டம் சரிவால் மாற்றம்
/
பி.ஏ.பி., இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்க இடைவெளி அதிகரிப்பு! திருமூர்த்தி அணை நீர் மட்டம் சரிவால் மாற்றம்
பி.ஏ.பி., இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்க இடைவெளி அதிகரிப்பு! திருமூர்த்தி அணை நீர் மட்டம் சரிவால் மாற்றம்
பி.ஏ.பி., இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்க இடைவெளி அதிகரிப்பு! திருமூர்த்தி அணை நீர் மட்டம் சரிவால் மாற்றம்
ADDED : பிப் 20, 2025 11:23 PM

உடுமலை ; திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திற்கு முதல் சுற்று, வரும் 24ல் நிறைவு செய்யப்பட்டு, இடைவெளி விட்டு இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் நீர் வழங்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தின் கீழ் பயன்பெறும், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 94 ஆயிரத்து, 362 ஏக்கர் நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த மாதம், 29ம் தேதி முதல், வரும் ஜூன் 13 வரை, 135 நாட்களில், உரிய இடைவெளிவிட்டு, ஐந்து சுற்றுக்களில், 10 ஆயிரத்து, 300 கனஅடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த இரண்டாம் மண்டல பாசனத்திற்கு, பருவ மழைகள் அதிகரிப்பு, பாசன பகுதிகளிலும் மழை பெய்து வந்ததால், முதல் இரண்டு சுற்றுக்கள் தொடர்ந்தும், கடைசி மூன்று சுற்றுக்கள் தொடர்ச்சியாகவும் நீர் வழங்கப்பட்டது.
ஆனால். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், நீர் இழப்பு ஏற்பட்டுள்ளது. திட்ட தொகுப்பு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததோடு, கடும் வறட்சி நிலவி வருகிறது.
இந்நிலையில், திருமூர்த்தி அணையிலிருந்து, பாசனத்திற்கு நீர் திறக்கப்படுவதால், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடும் வெயில், பாசன பகுதிகளில் வறட்சி நிலவுவதாலும், பாசன நீரை விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருமூர்த்தி அணை நீர்மட்டமும் குறைந்துள்ளதால், பிரதான மற்றும் கிளைக்கால்வாய்களில் அழுத்தம் இல்லாமல், பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், முதல் சுற்றுக்கும், இரண்டாம் சுற்றுக்கும், இடைவெளி விடப்படுகிறது.
வரும், 24ம் தேதி, முதல் சுற்று நிறைவு பெற உள்ள நிலையில், 10 நாட்கள் வரை இடைவெளி விடப்பட உள்ளது.
அதற்கு பின், திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வந்து சேகரித்து, அணை நீர்மட்டம் உயர்ந்ததும், இரண்டாம் சுற்றுக்கு, மார்ச் முதல் வாரத்தில் நீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இடைவெளி விடும் போது, மீண்டும் பயிர்களுக்கு நீர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதோடு, வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளதால், நிலைப்பயிர்கள் பாதிக்கும் நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், திறக்கப்படும் நீர் பாசன நிலங்களுக்கு உரிய அழுத்தத்துடன் செல்வதிலும், நீர் இழப்பும் அதிகரித்துள்ளது.
இதனால், முதல் சுற்றுக்கு நீர் வழங்குவது, வரும், 24ம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது. அதற்கு பின், திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக நீரை கொண்டு வந்து, திருமூர்த்தி அணையில் சேகரித்து, நீர் மட்டம் உயர்ந்ததும், மீண்டும், இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடைவெளி, ஏறத்தாழ, 10 நாட்கள் வரை இருக்கும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.