/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏழு குளங்களில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
/
ஏழு குளங்களில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
ஏழு குளங்களில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
ஏழு குளங்களில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜன 17, 2025 11:42 PM
உடுமலை, ; உடுமலை ஏழு குள பாசன திட்டத்திற்குட்பட்ட, குளங்களில், அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து வெளியேறும் தண்ணீரை தேக்கி வைத்து, விவசாயத்திற்கு பயன்படுத்த, ஏழு குளங்கள், ஏற்படுத்தப்பட்டு, பழமை வாய்ந்த பாசன திட்டமாக உள்ளது.
இக்குளங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, அரசாணை அடிப்படையில், தண்ணீர் திறக்கப்பட்டு, குளங்கள் நிரப்பபடுகின்றன.
இத்திட்டத்திலுள்ள ஒட்டுக்குளம், பெரியகுளம், செங்குளம், செட்டிக்குளம், தினைக்குளம், கரிசல்குளம், அம்மாபட்டி குளம், வலையபாளையம் குளம் ஆகிய குளங்களின் வாயிலாக 2,786 ஏக்கர் நேரடி பாசனமும், பல ஆயிரம் ஏக்கர் நிலத்தடி நீர்மட்டத்திற்கும் உதவியாக உள்ளது.
இக்குளங்களின் நீர்த்தேக்க பரப்பு பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆக்கிரமிப்புகளால், நேரடி பாசனம் பெறும் விளைநிலங்களின் நீர் நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. நீர்த்தேக்க பரப்பும் படிப்படியாக குறைந்து, கரைகளிலும் அரிப்பு உருவாகிறது.
பருவமழை குறைவு உட்பட காரணங்களால், ஏழு குளங்களில், நிரப்பபடும் தண்ணீரை அடிப்படையாக கொண்டே அப்பகுதியில், கரும்பு, தென்னை உட்பட சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நீர்த்தேக்க பரப்பு ஆக்கிரமிக்கப்படுவதால், குளத்தில் தண்ணீர் தேக்கப்படுவது பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டமும் அப்பகுதியில் குறைந்து வருகிறது.
இப்பிரச்னைகளுக்கு தீர்வாக குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த, 2014ல், 174 ஏக்கர் நீர்த்தேக்க பரப்புள்ள ஒட்டுக்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை வருவாய்த்துறையினர் மேற்கொண்டனர்.
கடந்தாண்டும் சில குளங்களில், ஆக்கிரமிப்பு அகற்ற, முதற்கட்ட பணிகள் துவங்கி, கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பழமை வாய்ந்த பாசன திட்டத்தையும், நீர்நிலைகளை பாதுகாக்கவும், அனைத்து குளங்களிலும், பாரபட்சம் இல்லாமல், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை சார்பில், இப்பணிகளை உடனடியாக துவக்க விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.