/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு அரசு கல்லுாரியில் துவக்க வலியுறுத்தல்
/
போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு அரசு கல்லுாரியில் துவக்க வலியுறுத்தல்
போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு அரசு கல்லுாரியில் துவக்க வலியுறுத்தல்
போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு அரசு கல்லுாரியில் துவக்க வலியுறுத்தல்
ADDED : நவ 26, 2024 07:42 PM
உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை மற்றும் முதுநிலையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். பொள்ளாச்சி, தாராபுரம், பழநி உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு பயில்கின்றனர்.
மாணவர்களுக்கு தரமான கல்வி, அடிப்படை கட்டமைப்பு வசதி உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படுகிறது. இருப்பினும், தற்போதுள்ள சூழலில் அரசு பணிகளை எதிர்நோக்கும் இளம் தலைமுறைகளின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.
அதற்கான போட்டித்தேர்வுகளை, மாணவர்கள் தங்களின் உயர்கல்வியின் போதும் எழுதுகின்றனர். இவ்வாறு போட்டித்தேர்வுகளுக்கான முக்கியத்துவம் கல்லுாரி மாணவர்களிடம் அதிகமாக உள்ளது.
ஆனால் அதற்கான முறையான பயிற்சி பெறுவதில் சிரமப்படுகின்றனர். அரசுகல்லுாரிக்கு வரும் பெரும்பான்மையான மாணவர்கள், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள்.
பலரும் பகுதிநேர வேலைக்கு செல்பவர்களாகவும் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் இதுபோன்ற போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதற்கு, பயிற்சி எடுக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
உடுமலை அரசு கல்லுாரியில், சில கல்வியாண்டுக்கு முன்பு, மாவட்ட வேலைவாய்ப்பு துறையின் சார்பில், ஒருமுறை போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டது. மாணவர்களும் நல்ல வரவேற்பு அளித்தனர். ஆனால் வகுப்புகள் தொடரவில்லை.
தற்போது மீண்டும் இதுபோன்ற போட்டிதேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை, கல்லுாரியில் துவங்க வேண்டுமென மாணவர்களும், உடுமலை கல்வியாளர்களும் எதிர்பார்க்கின்றனர். மாவட்ட நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.