/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசாரணை குழு அறிவிப்பு; மூடி மறைத்த அதிகாரிகள்? ஜம்புக்கல் விவசாயிகள் அதிர்ச்சி
/
விசாரணை குழு அறிவிப்பு; மூடி மறைத்த அதிகாரிகள்? ஜம்புக்கல் விவசாயிகள் அதிர்ச்சி
விசாரணை குழு அறிவிப்பு; மூடி மறைத்த அதிகாரிகள்? ஜம்புக்கல் விவசாயிகள் அதிர்ச்சி
விசாரணை குழு அறிவிப்பு; மூடி மறைத்த அதிகாரிகள்? ஜம்புக்கல் விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : டிச 22, 2025 05:25 AM
உடுமலை: உடுமலை அருகே, ஜம்புக்கல் மலை அபகரிப்பு பிரச்னையில், திருப்பூர் கலெக்டர், அரசுத்துறை அதிகாரிகளைக்கொண்ட குழு அமைத்ததை கூடமறைத்து, விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நாளில், விவசாயிகளுக்கு, குழு அமைத்துள்ளதன், உத்தரவு நகலை வழங்கிய அதிகாரிகளால் அனைத்து தரப்பினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக, ஆண்டியகவுண்டனுாரில், 2,770 ஏக்கரில் ஜம்புக்கல் மலை அமைந்துள்ளது.
1962ல் காப்புக்காடாக அறிவிக்கப்பட்ட நிலையில், 1971ல் சமதளப்பரப்பில், 314.21 ஏக்கர் நிலம் மட்டும் தீர்வை ஏற்படுத்தப்பட்ட தரிசாக மாற்றப்பட்டு, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு கண்டிசன் பட்டா வழங்கப்பட்டது.
இந்நிலையில், அந்த நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்து, அரசுக்கு சொந்தமான ஒட்டுமொத்த மலையையும் அழித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருவதோடு, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கடந்த, 10ம் தேதி முதல், தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே, கடந்த மாதம், 19ம் தேதி, வருவாய்த்துறை, வனத்துறை, பதிவுத்துறை, மின் வாரியம் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் மீது வந்த புகார் அடிப்படையில், சிறப்பு விசாரணைக்காக பிற துறை அலுவலர்களைக்கொண்ட சிறப்புக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
அதில், ஜம்புக்கல் மலைப்பகுதியில்நில மேம்பாட்டு திட்டத்தில், வழங்கப்பட்ட நிலத்தை, உடுமலையைச்சேர்ந்த தனி நபர், அழித்தும், ஆள் மாறாட்டம் செய்து, வருவாய்த்துறை, பதிவுத்துறை சார்ந்த சில அதிகாரிகளின் துணையுடன், போலி ஆவணங்களை உருவாக்கி, மோசடி செய்துள்ளதாகவும், வருவாய்த்துறை, காவல்துறை, பத்திர பதிவுத்துறை மற்றும் மின் வாரியம் அலுவலர்கள் மீது வந்துள்ள புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க, அரசு துணைச்செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும், சட்ட விரோதமாக வெடி மருந்துகளை பயன்படுத்தி கிணறு தோண்டுதல், வன உயிரினங்களின் வாழ்விடங்களை அழித்தல் போன்ற செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புகார் வந்துள்ளது.
இது குறித்து விசாரணை மேற்கொள்ள விசாரணை அலுவலர்களாக, வருவாய்த்துறை சார்ந்து விசாரிக்க, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை சிறப்பு மாவட்ட அலுவலர், காவல் துறை, திருப்பூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர், பத்திர பதிவு துறை, மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்), வனத்துறை, மாவட்ட வன அலுவலர், மின் பகிர்மான கழகம், உடுமலை மேற்பார்வை பொறியாளர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
மேற்கண்ட அலுவலர்கள் மனுதாரர்களிடமும், துறை சார்ந்த அலுவலர்கள் மீது வந்துள்ள குறித்து விசாரணை மற்றும் கள ஆய்வு செய்து, அறிக்கையை, மாவட்ட வருவாய் அலுவலரிடம், டிச., 20க்குள் சீலிட்டு ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள ஆய்வு நடத்தணும் விவசாயிகள் கூறியதாவது :அரசுக்குச்சொந்தமான மலையையும், ஏழை விவசாயிகளுக்கு வழங்கிய நிலத்தை அபகரித்தவர்கள், துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் மற்றும்உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தோம்.
அதன் அடிப்படையில், வேறு பகுதியில் பணியாற்றும் அலுவலர்கள், துறை சார்ந்த உயர் அதிகாரிகளைக்கொண்ட குழு அமைத்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பதிவுத்துறை சார்பில் மட்டும், சில விவசாயிகளிடம் விசாரணை நடந்தது. மற்ற துறை அதிகாரிகள் விசாரணை, கள ஆய்வு நடத்தியதாக தெரியவில்லை. உத்தரவில், புகார் கொடுத்தவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என தெளிவாக உள்ளது.
ஆனால், இதுவரை முறையான விசாரணை நடக்கவில்லை. நேற்றுமுன்தினம் (20ம் தேதி) விசாரணை அறிக்கை சீலிட்ட கவரில் வழங்க உத்தரவுள்ளது; எங்களுக்கு தற்போதுதான், அந்த கடித நகலேகிடைத்துள்ளது.
மலையை காப்பாற்றாமல், அதிகாரிகளை காப்பாற்றும் முயற்சியே நடந்து வருகிறது. இது குறித்து முறையான விசாரணை, கள ஆய்வு நடத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

