/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொடிக்கம்பங்களை அகற்றினால் மட்டும் போதுமா?
/
கொடிக்கம்பங்களை அகற்றினால் மட்டும் போதுமா?
ADDED : ஜூன் 30, 2025 12:37 AM

பல்லடம்; பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்ந்த கொடிக் கம்பங்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால், அவற்றை அகற்றுமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவின் படி, கொடிக்கம்பங்களை அகற்ற காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.
கோர்ட் உத்தரவை பின்பற்றி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இருப்பினும், சில இடங்களில், பிரதான கட்சிகள் இன்னும் கொடிக்கம்பங்களை அகற்றாமல் வைத்துள்ளன.
கோர்ட் உத்தரவின்படி, பெரும்பாலான இடங்களில் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்ட நிலையில், அவற்றின் கட்டமைப்புகள் அகற்றப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், சில இடங்களில், பொது இடங்களை ஆக்கிரமித்து, கொடிக்கம்பங்கள் அமைக்க கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதுபோன்ற கட்டுமானங்களும் அகற்றப்படாமல் இருப்பதால், பொதுமக்களுக்கான இடையூறுகள் தொடர்கின்றன.
விபத்து அபாயம் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை கருத்தில் கொண்டு, கொடிக்கம்பங்கள் மட்டுமன்றி அவற்றின் கட்டமைப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.