ADDED : அக் 07, 2025 01:07 AM

அவிநாசி;அவிநாசி தாலுகா அலுவலக வளாகத்தில், தாலுகா அலுவலகம், சார்நிலை கருவூலம், கிளைச்சிறை, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
அலுவலகங்களுக்கு பல்வேறு பணி நிமித்தமாக, சுற்றுவட்டாரத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
தாலுகா அலுவலக வளாகத்தில் பொது கழிப்பிடம் பயன்பாட்டில் உள்ளது. தற்போது பொது கழிப்பிடத்தின் செப்டிக் டேங்க் நிரம்பி, அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி குளம் போல தேங்கி நிற்கிறது.
இதன் அருகிலேயே, பொதுமக்கள் காத்திருக்கும் அறையும் உள்ளதால், துர்நாற்றம் தாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தேங்கியுள்ள கழிவுநீரில், கொசுக்கள் உற்பத்தி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. செப்டிக் டேங்க் கழிவு நீரை வெளியேற்றி அப்பகுதியை சுத்தப்படுத்தி, நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் சார்பில், மக்கள் சேவகன் அறக்கட்டளையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.