ADDED : நவ 03, 2025 12:22 AM

திருப்பூர்:  பின்னலாடை நிறுவனங்களில் உபரியாக தேங்கும் ஆடைகள் மற்றும் 'சாம்பிள்' ஆடைகள், அவ்வப்போது, மொத்தமாக விற்கப்படுகின்றன.
ஏஜன்ட்கள் மற்றும் சிறு வியாபாரிகள், நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று, ஆடைகளை வாங்கி செல்கின்றனர். இதேபோல், சிறு, குறு உற்பத்தியாளர்களும், சிறிய அளவிலான ஆடைகளை உற்பத்தி செய்து, காதர்பேட்டைக்கு விற்கின்றனர்.
நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களிடையே பின்னலாடைகள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. சிறுவர் துவங்கி முதியோர் வரை, அனைவரும் பின்னலாடைகளை வாங்கி உபயோகப்படுத்துகின்றனர்.
அதற்காக, ஞாயிற்றுக்கிழமை நடக்கும், காதர்பேட்டை கடைகளில், ஆடைகள் வாங்குகின்றனர்.
மங்கலம் ரோடு, அவிநாசி ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் தற்காலிக ரோட்டோர கடைகள் நடக்கின்றன. அதில், ஆண்கள், சிறுவர், சிறுமியருக்கான பின்னலாடைகள் விற்கப்படுகின்றன.
ஷோரூம்களில் இருக்கும் விலையை காட்டிலும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. 'ரவுண்ட் நெக்' டி- சர்ட் 50 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 'டி-சர்ட்'கள், 100 ரூபாய்முதல் விற்கப்படுகிறது. குழந்தைகள் ஆடைகள், 40 ரூபாய் முதல் கிடைக்கிறது. ஆண்களுக்கான, ஷார்ட்ஸ், 70 ரூபாயில் இருந்து கிடைக்கிறது.
அதாவது, வீட்டில் இருக்கும் நேரத்தில் அணியவும் இரவு நேரத்தில் அணியவும், இத்தகைய  ஆடைகளே ஏற்றதாக இருக்கின்றன.
தீபாவளி பண்டிகையின் போது, 10 நாட்கள் பரபரப்பாக விற்பனை நடந்தது. பொதுவாக, பண்டிகை முடிந்த சில வாரங்களுக்கு வியாபாரம் மந்தமாக இருக்கும். வடமாநில தொழிலாளர் திருப்பூரில் அதிகம் இருப்பதால், 'ஷண்டே ஷாப்பிங்' செய்ய வெளியே வருகின்றனர்.
முதல்கட்டமாக, காதர்பேட்டை கடைகளில் அலசி, தேவையான  ஆடைகளை தேர்வு செய்கின்றனர். இதன்காரணமாக, காதர்பேட்டை கடைகள் நேற்றும் பரபரப்பாக நடந்தது. பல்வேறு கடைகள் இருப்பதால், பல கடைகளை பார்த்து, பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

