/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாத்திர தொழிலாளர் சம்பள பேச்சுவார்த்தை இழுபறி
/
பாத்திர தொழிலாளர் சம்பள பேச்சுவார்த்தை இழுபறி
ADDED : மார் 10, 2026 05:44 AM
அனுப்பர்பாளையம்: திருப்பூர், பாத்திர தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. கடந்த முறை ஏற்படுத்தப்பட்ட சம்பள ஒப்பந்தம் கடந்த டிச. 31ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
புதிய சம்பளம் ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் பிரேமா, தலைமையில் நடைபெற்று வருகிறது.
நேற்று மாலை ஐந்தாவது கட்ட பேச்சு வார்த்தையில் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் பிரேமா, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளை தனி தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், எவர் சில்வர் பாத்திர உற்பத்தி தொழிலாளர்களுக்கு, 50 சதவீதம், பித்தளை மற்றும் செம்பு பாத்திர உற்பத்தி தொழிலாளருக்கு, 60 சதவீதமும் சம்பள உயர்வு வழங்க வேண்டுமென தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கத்தினர், 10 சதவீதமும், பித்தளை மற்றும் செம்பு பாத்திர சங்க உற்பத்தியாளர்கள், 10 சதவீதமும் தருவதாக கூறினார்கள். இதனை தொழிற்சங்கத்தினர் ஏற்று கொள்ளாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்த கட்ட பேச்சு, 16ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
பாத்திர உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறுகையில், 'எவர் சில்வர் மற்றும் பித்தளை, செம்புக்கு ஐந்து சதவீதத்தில் தொடங்கி படி படியாக உயர்ந்து 10 சதவீதம் வரை தருவதாக கூறி உள்ளோம். ஆனால், தொழிற்சங்கத்தினர் பிடிவாதமாக கேட்கும் சதவீதத்தில் இருந்து குறையாமல் அப்படியே உள்ளனர்.
பிடிவாதத்தை கைவிட்டு, சுமுகமான முறையில் பேச்சு வார்த்தை நடத்தினால், விரைவில் சுமூக தீர்வு கிடைக்கும்,' என்றனர்.

