/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேவூர் பெருமாள் கோவிலில், 30ம் தேதி மஹா கும்பாபிேஷகம்
/
சேவூர் பெருமாள் கோவிலில், 30ம் தேதி மஹா கும்பாபிேஷகம்
சேவூர் பெருமாள் கோவிலில், 30ம் தேதி மஹா கும்பாபிேஷகம்
சேவூர் பெருமாள் கோவிலில், 30ம் தேதி மஹா கும்பாபிேஷகம்
ADDED : நவ 07, 2025 11:03 PM

அவிநாசி: அவிநாசி அருகே சேவூரில், பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது. 12-ம் நுாற்றாண்டுக்கு முன்பு, கொங்குச் சோழர்களால் இக்கோவில் கட்டுமானம் கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. கொங்கு பாண்டியர்கள் காலத்தில், வட பரிசர நாட்டின் செம்பியன் கிழாநதி நல்லுார் என அழைக்கப்பட்டது.
அக்கால சங்கப் புலவர் குழந்தையின் தகவல்படி ஆறை நாடு என்றும், இப்போது உள்ள சேவூரை சுற்றியுள்ள இடங்களை செம்பை எனவும் அழைக்கப்பட்டதாக கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகிறது.
பாண்டியர்களின் கல்வெட்டுகள் கூற்றுப்படி 14ம் நுாற்றாண்டை சேர்ந்த சுந்தரபாண்டியனின் ஆட்சியில் சேவூரை சுந்தரபாண்டியர் விண்ணகரம் எனவும், 13 மற்றும் 14ம் நுாற்றாண்டில் சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் இக்கோவிலுக்கு அணையா தீபங்களுக்காகவும், பூஜைகளுக்காகவும் தேங்காய்கள், பழங்கள், நெய்வேத்தியம் செய்வதற்கும் பொற்காசுகள் வழங்கப்பட்டதாகவும் கல்வெட்டுகளில் சான்றுகள் உள்ளது.
தற்போதுள்ள பலிபீடம் 14ம் நூற்றாண்டின் ஹொய்சல மன்னர் மூன்றாம் வீரவல்லாலன் காலத்தில் தென்னவத்தராயன் என்ற விக்ரம கண்ணப்பனால் கட்டப்பட்டது என சான்று உள்ளது.
பாதியில் நின்ற திருப்பணி சோழர்களும், பாண்டியர்களும் வழிபட்டு வந்த புராதனமிக்க இக்கோவிலில், முறையான பராமரிப்பு இல்லாததால் 2002ம் ஆண்டு, வசந்த மண்டபம் பகுதியில் உள்ள கற்கள் பெயர்ந்து விழுந்தது. இதனால் முற்றிலும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து ஹிந்து சமய அறநிலையத்துறை யினரால் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக பாலாலயம் நடைபெற்றது.
இந்நிலையில், 2003ல் கும்பாபிஷேக திருப்பணி அறநிலையத்துறை சார்பில் உபயதாரர்கள் வழங்கிய நன்கொடையில் துவங்கப்பட்டது.
அதில், மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மஹா மண்டபம், அம்மன் சன்னதிகள், சுற்றுச்சுவர், மேல்நிலை நீர் தொட்டி, தீபஸ்தம்பம் ஆகியவை புதியதாக கட்டப்பட்டது. இதற்கிடையில் நிதி பற்றாக்குறையால் திருப்பணிகள் பாதியில் நின்றது.
அதன்பின், கும்பாபிஷேக திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றிட சுதர்ஷன ஹோமம் நடத்தினர். தொடர்ந்து, சொர்க்கவாசல் அமைத்து மதில் சுவர் கட்டுதல், முகப்பு தோரண வாயில் அமைத்து மதில் சுவர் கட்டுதல், கோவில் வளாகத்திற்குள் நடைபாதை கல் தளம் அமைத்தல், மூலவர் விமானம், மகாலட்சுமி விமானம், ஆண்டாள் விமானம், பஞ்சவர்ணம் தீட்டுதல், மகா மண்டபம் முன்பு ஓட்டுக்கரை மண்டபம் அமைத்தல், புதிய மடப்பள்ளி அமைத்தல் ஆகிய கும்பாபிஷேக மராமத்து திருப்பணிகளை, உபயதாரர்கள் வாயிலாக, ஹிந்து அறநிலையத் துறையினர் மேற்கொண்டனர்.
தற்போது கும்பாபிஷேக திருப்பணி மராமத்து வேலைகள் முழுமையாக முடிந்து, வரும் 30ம் தேதி காலை 7:00 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் திருப்பணி குழுவினர், ஹிந்து சமய அறநிலைத்துறையினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

