ADDED : ஜூலை 20, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர், தாராபுரம் ரோடு, காளிபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால், இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எஸ்.ஐ., பிரியதர்ஷினி மற்றும் போலீசார் காளிபாளையம், ஏரிக்காடு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, 1,350 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் ஒரு வீட்டில் பதுக்கியது தெரிந்தது. இது தொடர்பாக, கோவை - நேரு நகரைச் சேர்ந்த சுதாகர், 21 என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் சுற்றுப்பகுதியில் உள்ள வீடுகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கூடுதல் விலைக்கு வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வது தெரிந்தது. அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த போலீசார் சுதாகரை கைது செய்தனர்.