ADDED : ஜன 09, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; சேமலைக்கவுண்டம்பாளையத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, கொடுவாய் பகுதியில், நேற்று பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்க வந்த ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஆறுமுகம்,38, தனது பாக்கெட்டில் வைத்திருந்த, 30 ஆயிரம் ரூபாயை மர்மநபர் லாவகமாக எடுத்து சென்று விட்டார். ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னரே, ஆறுமுகம் இதனை கவனித்தார்.
அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து அவிநாசிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் திருடியவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

