/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மயில்கள் மர்ம மரணம்; வனத்துறை விசாரணை
/
மயில்கள் மர்ம மரணம்; வனத்துறை விசாரணை
ADDED : பிப் 13, 2025 07:09 AM
அவிநாசி; அவிநாசி அருகே தொரவலுார் ஊராட்சிக்குட்பட்ட டி.ஆண்டிபாளையம் பகுதியில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்திலும், அதன் அருகேயுள்ள காலி இடத்திலும் மர்மமான முறையில் மூன்றுக்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்தன. அவற்றை தெருநாய்கள் கடித்து குதறி இழுத்துச் சென்றன. பெருமாநல்லுார் போலீசார், வனத்துறையினருக்கு தகவல் அளித்து விசாரித்தனர்.
இறந்த மயில்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்காக பெருமாநல்லுார் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயில்களுக்கு உணவாக போடப்பட்டிருந்த அரிசியையும் கைப்பற்றி பரிசோதனை செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.
வனவர் சங்கீதாவிடம் கேட்டபோது, ''விவசாய விளை பொருட்களை சேதம் செய்வதால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என்ற சந்தேகத்தின் பேரில் விசாரித்தோம். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் மயில்கள் உணவு ஒவ்வாமை காரணமாக இறந்துள்ளதாக தெரியவந்தது'' என்றார்.