/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இனி, வசந்த காலம்! தொழில்துறையினர் நம்பிக்கை
/
இனி, வசந்த காலம்! தொழில்துறையினர் நம்பிக்கை
ADDED : ஜன 02, 2025 06:10 AM

திருப்பூர்: பல்வேறு சவால்களை கடந்து, இயல்புநிலைக்கு திரும்பியுள்ள திருப்பூர் பனியன் தொழில்துறைக்கு, 2025ம் ஆண்டு புதிய வசந்தத்தை கொடுக்கும் என, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சாதகமான சூழல்
திருப்பூர் ஏற்றுமதியை பொறுத்தவரை, முந்தைய காலங்களில் இல்லாத அளவுக்கு, 2025ம் ஆண்டு வளர்ச்சி கிடைக்கும். அனைத்து காரணிகளும், திருப்பூர் ஏற்றுமதியாளருக்கு சாதகமாக அமைந்துள்ளன. அண்டை நாடுகளின் நிலையற்ற தன்மை நிலவுகிறது. சீனாவின் மீது, அமெரிக்கா அதிக வரிவிதிப்பு செய்ய வாய்ப்புள்ளது. பிரிட்டனுடனான, வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தில் இருக்கிறது. இந்தாண்டு நிறைவேற வாய்ப்புள்ளது. அதன்படி, திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சியில், 2025ம் ஆண்டு பெரும் பங்கு வகிக்கும்.
- இளங்கோவன்
அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள்
கூட்டமைப்பு (அபாட்) தலைவர்
இந்தியாவை நோக்கி...
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் சரியானாலும், பல்வேறு சவால்கள் எழுந்துள்ளது. அந்த நாடு, ஐரோப்பாவுடன் கொண்டுள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், 2027ல் காலாவதியாகிறது. இருப்பினும், வங்கதேசத்துடன் நீண்ட தொடர்பில் இருந்த, ஐரோப்பிய, அமெரிக்க நாட்டு வர்த்தகர்கள், இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளனர். நீடித்த நிலையான வர்த்தகம் செய்ய, திருப்பூர் தான் சரியான தேர்வு என்று வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடியின் வாயிலாக, திருப்பூர் பல்வேறு புதிய விஷயங்களை கற்றுக்கொண்டது. உலகளாவிய மாற்றங்களுக்கு, ஏற்றுமதியாளர்கள் தங்களை உட்படுத்திக்கொண்டனர். இதனால், 2025ம் ஆண்டு புதிய வசந்தத்தை உருவாக்கும்.
- குமார் துரைசாமி
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர்
சாதனை புரிவோம்
வங்கதேத்தில் உருவான குழப்பத்துக்கு பின், அந்த நாட்டில் இருந்து, துணி வகைகள் இறக்குமதியாவது, வெகுவாக குறைந்துவிட்டது. ஆயத்த ஆடை இறக்குமதி எதிர்பார்த்த அளவு குறையவில்லை. சீனாவில் உற்பத்தியாகும், ஆடைகள், வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் வந்து குழப்பம் ஏற்படுத்துகிறது. 2025ம் ஆண்டில், நாடு முழுவதும் உள்ள பிரச்னைகளை தீர்க்க, வங்கதேச ஆடை இறக்குமதிக்கு சரியான கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும். பல்வேறு சோதனைகளை கடந்து, திருப்பூர் தொழில் துறை நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. இதனை தக்கவைக்க அனைத்து முயற்சிகளையும் ஒற்றுமையுடன் மேற்கொள்வது தற்போதைய அவசியம்.
- பாலசந்தர்
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்
சங்க (சைமா) துணை தலைவர்
நல்ல சூழல் உள்ளது
ஜவுளி இறக்குமதி நாடுகள், பசுமை சார் உற்பத்தியை எதிர்நோக்கி, பல்வேறு சட்டம் இயற்றியுள்ளன. அவர்களது எதிர்பார்ப்புகளை திருப்பூரால் மட்டுமே நிறைவேற்ற முடியும். திருப்பூரில் மட்டும், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை, நாங்கள் பயன்படுத்துகிறோம். நாடு முழுவதும் இதே தொழில்நுட்பத்தை கடடாயமாக்க வேண்டும். வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியில் திருப்பூர் முன்னோடியாக இருப்பதால், 2025ம் ஆண்டு திருப்பூருக்கு புதிய வாய்ப்புகளை கொடுக்கும் ஆண்டாக இருக்கும். இதற்கான நல்ல சூழல் தென்படுகிறது. இதனை கையகப்படுத்தி, திருப்பூர் தொழில் துறையை இன்னும் முன்னேற்றுவோம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
- காந்திராஜன் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர்
'செக்' வைக்கணும்...
கடந்த, 2024ம் ஆண்டு, வங்கதேசத்துக்கு பாதகமான ஆண்டாக அமைந்துவிட்டது. அந்நாட்டில் அமைதி திரும்பிய பின், தொழில்நிலை மாறிவிட்டது. அங்கிருந்து, இந்தியாவுக்கு வரும் நுால், துணி ஏற்றுமதி குறைந்துவிட்டது. இதனால், நாடு முழுவதும் உள்ள, துணி உற்பத்தியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். விரைவில், ஆடை இறக்குமதியை கட்டுப்படுத்தவும், மத்திய அரசு 'செக்' வைக்க வேண்டும். வங்கதேசத்தின் ஆர்டர்கள், திருப்பூரை நோக்கி திரும்பும் என்பதால், முழு அளவில் நாமும் தயாராக வேண்டும். இதற்கு முன் எத்தனயோ இடையூறுகளை பார்த்து விட்டோம். அதிலிருந்து கற்ற பாடங்கள் தற்போது கைகொடுக்கிறது. திருப்பூர் மேலும் கண்டிப்பாக முன்னேறும்.
- முத்துரத்தினம்
திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள்
சங்க (டீமா) தலைவர்
அதிக ஆர்டர் கிடைக்கும்
இன்று (நேற்று) பிறந்துள்ள, 2025ம் ஆண்டு, நல்ல ஆண்டாக இருக்கும்ம. இன்றைய காலகட்டத்தில், உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி என, 'பிரின்ட்' இல்லாத 'டி-சர்ட்' இல்லை. மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகளுக்கு மட்டும் வரவேற்பு உள்ளது. உலக அளவில் அறிமுகம் செய்யும், பிரின்டிங் தொழில்நுட்பத்தை, திருப்பூரில் உடனுக்குடன் செயல்படுத்தும் வகையில் உயர்ந்துள்ளோம். மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தி ஆர்டர், திருப்பூருக்கு அதிக அளவு கிடைக்கும்.
- ஸ்ரீகாந்த்
'டெக்பா' தலைவர்
வரி வேண்டாமே....
உலக அளவில் நிலவும் மாறுபட்ட சூழலால், திருப்பூருக்கு வாய்ப்பு உருவாகும். சீனா, வங்கதேசத்தில் உள்ள குழப்பத்தால், நமது உள்நாட்டு ஜவுளி மேம்படும். போர் சூழல் முற்றிலும் மறைந்தால், ஏற்றுமதி வர்த்தகம் சீராகும். கடந்த, 2024ம் ஆண்டை காட்டிலும், 2025 மாறுபட்டதாக இருக்கும். மத்திய அரசு, விலை உயர்ந்த ஆடைகளுக்கு, 28 சதவீதம் வரை ஜி.எஸ்.டி., விதிப்பதை தவிர்க்க வேண்டும்.
- கோபிநாத் பழநியப்பன்
'நிட்மா' சங்க இணை செயலாளர்
திருப்பூருக்கு திருப்புமுனை
கடந்த ஆண்டுகளில், பல்வேறு பிரச்னைகளை திருப்பூர் பனியன் தொழில் சந்தித்திருக்கிறது. இனி, எந்த பிரச்னை வந்தாலும், முன்கூட்டியே சமாளிக்கும் திறன் கிடைத்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஆர்டர்கள் அதிகம் கிடைத்துள்ளதாக, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2025ம் ஆண்டு, திருப்பூருக்கு கண்டிப்பாக திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில், மிகுந்த நம்பிக்கை பிறந்துள்ளது.
- கோபாலகிருஷ்ணன்
திருப்பூர் கம்ப்யூட்ட எம்பிராய்டர்ஸ் அசோஸியேஷன் தலைவர்
'கவுன்டர் வயலிங் டியூட்டி'
உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்களுக்கு, பெரிய சவாலாக இருப்பது, வங்கதேச ஆடை இறக்குமதி; சீனா ஆடையும் நமது நாட்டுக்குள் வருகிறது. மத்திய அரசு, வங்கதேச ஆடை இறக்குமதியை கட்டுப்படுத்த, மீண்டும், 'கவுன்டர் வயலிங்' டியூட்டி விதித்தால், 2025ம் ஆண்டு சிறப்பாக இருக்கும். தற்போதைய சூழலில், பின்னலாடை தொழில் நல்ல சூழல் நிலவுகிறது. இதனை தக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
- தேவராஜ்
திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை
உற்பத்தியாளர்கள் சங்க பொருளாளர்
நன்மதிப்பு உயரட்டும்
பல்வேறு வகையான சூழல்நிலை மாற்றத்தால், உலக அளவில், பொருளாதார சூழல் மேம்படும்; ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும். சீரான நுால் விலை, அதிகரிக்கும் ஆர்டர் என, தற்போதுள்ள பிறந்துள்ள 2025ம் ஆண்டு ஒட்டுமொத்த திருப்பூர் பனியன் தொழில், பழைய வளர்ச்சி நிலையை அடைய வாய்ப்புள்ளது. இதனால், சர்வதேச அரங்கில், திருப்பூரின் மதிப்பு மேலும் உயரும். வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.
கோவிந்தசாமி
- திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்க தலைவர்
ஊக்கம் அளிக்கணும்!
தற்போது பிறந்துள்ள, 2025ம் ஆண்டு, திருப்பூர் தொழில் துறை எதிர்கொண்ட பல்வேறு சவால்களை வெற்றிகரமாக மாற்ற கைகொடுக்கும். கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தின்படி, வளர்ச்சி கிடைக்கும். தொழில் மேலும் வளர நல்ல சூழ்நிலை தென்படுவதால், இந்தாண்டு தொழில் நல்ல நிலைக்கு மேம்பாடு அடையும். அதற்கான தொழில் துறையினர் எடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கமளிக்க வேண்டும்.
- சண்முகம்
திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்