ADDED : பிப் 19, 2026 05:23 AM

திருப்பூர்: காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், கடந்த 3ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூரில், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் ஏராளமானோர், கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன், பந்தல் அமைத்து முகாமிட்டிருந்தனர்.
காய்கறி, மளிகை பொருட்கள் கொண்டு வந்து, உணவு தயாரித்து உட்கொண்டனர். பிச்சை எடுப்பது, ஒப்பாரி, கருப்பு சேலை, தட்டுகளை தட்டி ஒலி எழுப்புவது என, நுாதன போராட்டங்கள் நடத்தினர்.
நேற்று, ரயில்வே ஸ்டேஷன் முன் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், கலெக்டர் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த ஷாமியானா பந்தல் அகற்றப்பட்டது.
அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் அனைவரும், ரயில்வே ஸ்டேஷன் முன் திரண்டனர். ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஊத்துக்குளி ரோடு, குமரன் ரோட்டிலிருந்து புஷ்பா மேம்பாலம் செல்லும் ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய களமிறங்கினர். சில நிமிடங்களிலேயே சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களே, போலீஸ் வாகனங்களில் அமர்ந்து கொண்டனர். 225 பேரை கைது செய்த போலீசார், அருகிலுள்ள மண்டபத்தில் தங்கவைத்து, மாலையில் விடுவித்தனர்.

