/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் அதிகாரிகள்'
/
'வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் அதிகாரிகள்'
ADDED : பிப் 05, 2024 01:34 AM

பொங்கலுார்;அவிநாசி பாளையத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க கொடி ஏற்று விழா, புதிய கட்டடத் திறப்பு விழா, உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது:
இப்பகுதி விவசாயம் நிறைந்த பகுதி. இங்கு விவசாயிகளுடன், வியாபாரிகள் இணைந்து சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் வணிகர் சங்கம் துணை நிற்கும்.
வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து முழுமையாக தெரியாது. அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை. ஆனால், வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கின்றனர். தராசு முத்திரை பிரச்னை மாவட்டத்தில் அதிகம் உள்ளது. இதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணப்படும்.
இடர்பாடுகளில் சிக்கி உயிரிழக்கும் வியாபாரிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு பதிலாக தற்போது மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைவரும் வியாபாரிகள் நலவாரியத்தில் உறுப்பினராக வேண்டும். மத்திய அரசு 'முத்ரா' திட்டத்தில் கடன் உதவி அளிக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு வணிகர்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாநிலத் துணைத் தலைவர்கள் பால நாகமாணிக்கம், ஞானசேகரன், கோவை மண்டல தலைவர் சந்திரசேகர், திருப்பூர் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

