/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., தொழிற்சங்க கட்டடம் இடிக்க உத்தரவு
/
தி.மு.க., தொழிற்சங்க கட்டடம் இடிக்க உத்தரவு
ADDED : பிப் 15, 2024 02:46 AM

திருப்பூர்:திருப்பூர் குமரன் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் இணையும் இடத்தில், 1 சென்ட் பரப்பில் தி.மு.க., பனியன் தொழிற்சங்கம் செயல்படுகிறது. இந்த இடம், மாநகராட்சிக்கு சொந்தமான இடம். போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், இதை அகற்ற வேண்டும் என, வக்கீல் சுகுணாதேவி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அங்கு தெரிவிக்கப்பட்ட தகவல் படி, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ், அந்த கட்டடத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டுள்ளார்.
வக்கீல் சுகுணாதேவி கூறியதாவது:
ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள தொழிற்சங்க கட்டடம் அருகேயுள்ள நிலத்தை, 2003ம் ஆண்டில் கிரயம் செய்தேன். அங்கு, மகளிர் சட்ட உதவி மையம் அமைத்து, பெண்களுக்கு உதவும் வகையில் திட்டமிடப்பட்டது.
ஆனால், தி.மு.க., தொழிற்சங்கத்தினர் என் இடத்தை ஆக்கிரமித்து, காலி செய்ய மறுத்தனர். வேறு ஒரு அமைப்புக்கு, அந்த இடத்தை வாடகைக்கு விட்டுள்ளனர். என் இடத்தை காலி செய்ய மறுத்து மிரட்டல் விடுத்தனர். பல தரப்பில், 20 ஆண்டுகளுக்கும் மேல் போராடியும் பயனில்லாமல் போனது. கடைசி முயற்சியாக ஐகோர்ட்டை அணுகியதால், இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

