/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களில் மாயமாகும் 'ரிசர்வ் சைட்'; கிடப்பில் போடப்பட்ட உத்தரவு
/
கிராமங்களில் மாயமாகும் 'ரிசர்வ் சைட்'; கிடப்பில் போடப்பட்ட உத்தரவு
கிராமங்களில் மாயமாகும் 'ரிசர்வ் சைட்'; கிடப்பில் போடப்பட்ட உத்தரவு
கிராமங்களில் மாயமாகும் 'ரிசர்வ் சைட்'; கிடப்பில் போடப்பட்ட உத்தரவு
ADDED : ஆக 01, 2025 07:34 PM
உடுமலை; ஊராட்சிகளில் உள்ள 'ரிசர்வ் சைட்' களை மீட்டு, அங்கு பசுமைப்போர்வையை உருவாக்க வேண்டும் என்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவு, குடிமங்கலம் ஒன்றியத்தில் கண்டுகொள்ளப்படவில்லை. இதனால், 'ரிசர்வ் சைட்'கள் ஆக்கிரமிப்பால் மாயமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகள் உள்ளன. பல்வேறு ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில், புதிதாக அதிகளவு வீட்டு மனைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அமைக்கப்பட்ட வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டு, குடியிருப்புகளும் உருவாகியுள்ளது.
வீட்டு மனைகள் அமைப்பதற்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாமல், பி.ஏ.பி., பாசன நிலங்கள், விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும், முறையாக 'ரிசர்வ் சைட்' ஒதுக்கீடு செய்யப்படாமலும் உள்ளது.
பொதுவாக, 'ரிசர்வ் சைட்'களில் பூங்கா, மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி ஆகியவற்றை மேற்கொள்ள மட்டுமே, ஊராட்சிகளுக்கு அனுமதியுண்டு.
அவ்விடத்தில், ஊராட்சிக்கு சொந்தமான இடம் என்ற தகவல் பலகையும் வைக்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை.
இது குறித்து எழுந்த தொடர் புகார் அடிப்படையில், கடந்தாண்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் ஊராட்சி, ஒன்றிய நிர்வாகங்களுக்கு உத்தரவு வெளியிடப்பட்டது.
அதன்படி, 'பொது ஒதுக்கீட்டு இடங்களை கண்டறிந்து, அவற்றை ஊராட்சி பெயரில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும். வீட்டுமனையிடங்களில் உள்ள 'ரிசர்வ் சைட்'களில், பசுமை போர்வையை உருவாக்கி, ஊராட்சிகளின் பெயரில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும், ' என உத்தரவிடப்பட்டது.
மேலும், அனுமதியற்ற வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில், கிராம ஊராட்சிகளுக்கு கிடைக்கும் அபிவிருத்தி கட்டணத்தில், 'ரிசர்வ் சைட்'களை சுற்றி வேலி அமைக்க வேண்டும்; அந்த இடம், வெளிநபர்களால் ஆக்கிரமிக்கப்படுவதை தவிர்க்க, 'அந்த இடம் ஊராட்சிக்கு சொந்தமானது,' என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
அந்த இடத்தில் எந்தவொரு கட்டுமானப்பணியும் மேற்கொள்ளாமல், மரக்கன்றுகளை மட்டும் நட்டு, பசுமையை உருவாக்க வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, 'ரிசர்வ் சைட்'களின், ஆக்கிரமிப்பில் உள்ள ரிசர்வ் சைட்களின் விபரத்தை, ஊராட்சி நிர்வாகத்தினர் சேகரித்தனர். அதன்பின்னர், எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், 'ரிசர்வ் சைட்'கள் ஆக்கிரமிப்பால் மாயமாகி வருகிறது. புதிதாக அமைக்கப்பட்ட வீட்டு மனையிடங்களில் தகவல் பலகையும் வைக்கப்படாமல், விதிகளை மீறி, மனைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகத்தினரும் அலட்சியமாக உள்ளனர். எனவே, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ரிசர்வ் சைட்கள் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளது.

