/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கை வேளாண்மைக்கு தேவை இடுபொருள்! தமிழக அரசு உதவ எதிர்பார்ப்பு
/
இயற்கை வேளாண்மைக்கு தேவை இடுபொருள்! தமிழக அரசு உதவ எதிர்பார்ப்பு
இயற்கை வேளாண்மைக்கு தேவை இடுபொருள்! தமிழக அரசு உதவ எதிர்பார்ப்பு
இயற்கை வேளாண்மைக்கு தேவை இடுபொருள்! தமிழக அரசு உதவ எதிர்பார்ப்பு
UPDATED : மார் 13, 2024 05:09 AM
ADDED : மார் 12, 2024 09:57 PM

உடுமலை;பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதாக தெரிவிக்கும் தமிழக அரசு, இயற்கை வேளாண்மைக்கு தேவையான, இடுபொருட்கள் எளிதாகவும், மானியத்தில் கிடைக்க செய்ய வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், உணவு பொருட்கள் உற்பத்திக்காக, விவசாய சாகுபடியில், பல்வேறு ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக, காய்கறி உற்பத்திக்கு, அதிகளவு ரசாயனங்கள் பயன்படுத்துவதால், உடல் நலனுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், பாரம்பரிய இயற்கை வேளாண்மை முறைகளுக்கு, தற்போது மக்களிடையே வரவேற்பு கிடைத்து வருகிறது.
தேங்காய் மற்றும் காய்கறிகள், தானியங்கள் உட்பட உற்பத்திக்கான சாகுபடிகளில், ரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளை விவசாயிகள் தவிர்க்க துவங்கியுள்ளனர். மாறாக, மூலிகை பூச்சி விரட்டி உட்பட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை, பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
இவ்வாறு, இயற்கை வேளாண்மையில் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு, சந்தைகளில் நல்ல வரவேற்பும் உள்ளது. ஆனால், இத்தகைய இயற்கை வேளாண் சாகுபடிக்கான இடுபொருட்கள், தேவையான போது கிடைப்பதில்லை.
விலையும் அதிகளவு உள்ளது. அனைத்து விவசாயிகளும் தேவையான இடுபொருட்களை உற்பத்தி செய்வதில் சிக்கல் உள்ளது. இதனால், இயற்கை முறைக்கு மாற விரும்புபவர்களும் மீண்டும், ரசாயன உரம் மற்றும் மருந்துகளை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகிறது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், வெள்ளை ஈ தாக்குதலால், தென்னை சாகுபடியில், கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இத்தாக்குதலை கட்டுப்படுத்த, பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்த்து, வேப்பம்புண்ணாக்கு மற்றும் வேப்ப எண்ணெயை பயன்படுத்த வழிகாட்டுதல் வழங்கினர்.
ஆனால், தரமான வேப்பம்புண்ணாக்கு, சந்தைகளில் கிடைப்பதில்லை. விவசாயிகள், தாராபுரம் உட்பட பல்வேறு பகுதிகளுக்குச்சென்று, இவற்றை வாங்கி வருகின்றனர்.
இதே போல், இயற்கை வேளாண்மைக்கு தேவையான இடுபொருட்கள் தரமாகவும், குறைந்த விலைக்கும் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, நஞ்சில்லாத உணவு உற்பத்திக்கு, பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், கருத்தரங்கு மட்டும் நடத்துவதை தவிர்த்து, இயற்கை வேளாண்மைக்கு, அரசு உதவியும் செய்ய வேண்டும்.
விவசாயிகள் கூறியதாவது: இயற்கை வேளாண்மைக்கு தேவையான இடுபொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. இதனால், அலைக்கழிக்கப்படும் விவசாயிகள் மாற்றத்துக்கு தயங்குகின்றனர்.
எனவே, வேளாண்துறை சார்பில், வட்டார வாரியாக, இயற்கை வேளாண்மைக்கான இடுபொருட்கள், உயிர் உரங்கள் ஆகியவற்றை ஒரே மையத்தில், மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும்.
இதனால், அரசுக்கு, வருவாய் கிடைப்பதுடன், இயற்கை வேளாண்மை சாகுபடி பரப்பும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது குறித்து வேளாண்துறை பரிசீலித்து, அரசுக்கு கருத்துரு, அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

