/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெளிமாநில தொழிலாளர் கணக்கெடுப்பு துவங்குகிறது
/
வெளிமாநில தொழிலாளர் கணக்கெடுப்பு துவங்குகிறது
ADDED : நவ 21, 2025 06:13 AM
- நமது நிருபர் -:
திருப்பூர் மாவட்டத்தில், கட்டுமானம் மற்றும் இதர துறைகளில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர் கணக்கெடுப்பு தொடர்பான ஆலோசனைக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காயத்ரி உள்பட தொழிலாளர் துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கலெக்டர் பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமான பணிகள், தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும், வெளிமாநில தொழிலாளர் விபரங்களை பதிவு செய்வதற்காக, https://labour.tn.gov.in/ism என்கிற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிமாநில தொழிலாளரை பணி அமர்த்தியுள்ள நிறுவனங்கள், இந்த இணையதளம் வாயிலாகவும், தொழிலாளர் நலத்துறை வாயிலாகவும் விபரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும்.
கட்டுமான பணிகள் மற்றும் கட்டுமானம் சார்ந்த பணிகளில் ஈடுபடும் வெளிமாநில தொழிலாளர்களை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் https://tnuwwb.tn.gov.in என்கிற இணையதளத்தில், வேலை அளிப்பவர் வாயிலாகவோ அல்லது தொழிற்சங்கங்கள், தனிநபர் பதிவு செய்து, அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும், வெளிமாநில தொழிலாளர் குறித்த கணக்கெடுப்பு பணிக்கு, அனைத்து அரசுத்துறை மற்றும் தொழில் நிறுவனங்களும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.

