/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., தண்ணீர் கேட்டு காத்திருப்பு போராட்டம்!
/
பி.ஏ.பி., தண்ணீர் கேட்டு காத்திருப்பு போராட்டம்!
ADDED : ஏப் 23, 2025 07:00 AM

காங்கயம்; பி.ஏ.பி., வாய்க்காலின் கடைமடைக்கு நீர் சரிவர வந்து சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டை விவசாயிகள் முன்வைத்த, பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளைக்கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், காங்கயம் தாலுகா ஆபீசில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
அதன் சங்க தலைவர் வேலுசாமி கூறுகையில், '''அணைகளில் போதியளவு நீர் இருந்தும், திருமூர்த்தி அணையில் இருந்து தேவையான அளவு நீர் திறந்து விடப்பட்டும், கடைமடை விவசாயிகளுக்கு நீர் வந்து சேரவில்லை. சில பகுதிகளில் ஏழு நாட்களுக்கும் அதிகமான நாட்கள் நீர் வினியோகம் நடைபெறுகிறது.
சில இடங்களில் நிர்ணயிக்கப்பட்டு அளவுக்கு அதிகமாகவே நீர் வினியோகிக்கப்படுகிறது. முந்தைய நாட்களில் திறந்து விடப்படும் நீரில், 40 சதவீதம் நீர் வந்து கொண்டிருந்தது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும்,'' என்றார்.
'தண்ணி' காட்டியவிவசாயிகள்
காலை, 10:00 மணிக்கு, பி.ஏ.பி., அலுவலகத்தில் தான் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக, விவசாயிகள் தெரிவித்திருந்தனர். இதனை முன்கூட்டியே அறிந்து, பி.ஏ.பி., அலுவலகத்திற்குள் விவசாயிகள் நுழைய முடியாத வகையில், போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால், சாதுயர்மாக செயல்பட்ட விவசாயிகள், காங்கயம் தாலுகா அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
அதன்பின், காங்கயம் டி.எஸ்.பி., மாயவன். தாசில்தார் மோகன், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர்.
அதில், 'திருப்பூர் கலெக்டர், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் முன்னிலையில், 'நீர் வினியோகத்தில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக கூட்டம் ஏற்பாடு செய்து தரப்படும்' என, அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால், விவசாயிகள் கலைந்து சென்றனர்.