/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேண்டாமே 'தொள தொள' சீருடை பெற்றோர் எதிர்பார்ப்பு
/
வேண்டாமே 'தொள தொள' சீருடை பெற்றோர் எதிர்பார்ப்பு
ADDED : மே 14, 2025 11:39 PM
திருப்பூர், ; 'புதிய கல்வியாண்டு துவங்க உள்ள நிலையில், அரசின் சார்பில், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சீருடைகள் சரியான அளவில் இருக்க வேண்டும்' என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
புதிய கல்வியாண்டு துவங்க உள்ள நிலையில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அரசின் சார்பில் இலவச சீருடை, புத்தகம் ஆகியவை பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே வழங்கப்பட்டு விடுகிறது.ஒரு கல்வியாண்டுக்கு நான்கு 'செட்' சீருடை வழங்கப்படுகிறது.
அந்த சீருடை பெரும் பாலான மாணவ, மாணவியருக்கு சரியான அளவில் இருப்பதில்லை. இறுக்கமாகவோ, அல்லது மிகவும் தொள, தொளவெனவோ இருக்கின்றன.
பெற்றோர்கள் கூறியதாவது: மாணவர்களின் உடல் அளவுக்கு ஏற்ற வகையில் சீருடைகள் இருப்பதில்லை. கை கால்களை நுழைக்க முடியாதபடி சிறியதாகவும், சிறிய உடல்வாகுள்ள குழந்தைகளுக்கு பெரிய அளவிலும் உள்ளது. பெரியதாக உள்ள சீருடைகளை, ஆசிரியர்கள் சரிபார்த்து குழந்தைகளின் உடல் அளவுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து வழங்குகின்றனர்.
ஆனால், சிறியதாக அமைந்து விடும் சீருடைகளை, மாற்றவும் முடியாமல் வீணாகிறது. இதனால், பெற்றோர் மீண்டும் புதிதாக சீருடைகளை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. எனவே, தனியார் பள்ளிகள் போன்று, ஒவ்வொரு மாணவ, மாணவியரின் உடல் அளவெடுத்து, சரியான அளவில் சீருடைகள் தைத்து கொடுக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.