/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதான ரோட்டில் நிழற்கூரை இல்லாததால் மக்கள் அவதி
/
பிரதான ரோட்டில் நிழற்கூரை இல்லாததால் மக்கள் அவதி
ADDED : ஆக 11, 2025 08:42 PM
உடுமலை; சின்னவீரம்பட்டி, இந்திராநகர் பகுதி பிரதான ரோட்டில், பஸ் ஸ்டாப் நிழற்கூரை இல்லாமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
உடுமலை அருகே, சின்னவீரம்பட்டி இந்திரா நகர் பகுதி, தாராபுரம் ரோட்டின் இணைப்பில் பஸ் நிறுத்தம் உள்ளது.
இங்கு முன்பு நிழற்கூரை வசதியும் இருந்தது. தாராபுரம் ரோடு விரிவாக்கத்தின் போது நிழற்கூரை அப்புறப்படுத்தப்பட்டதால், தற்போது பொதுமக்கள் திறந்த வெளியில் நின்றுதான் காத்திருக்கின்றனர். ரோட்டோரத்தில் இரவு நேரங்களில் வெளிச்சம் குறைவாக இருப்பதால், பயணியர் நிற்பது ஓட்டுநர்களுக்கு தெரிவதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. ரோட்டின் இருபுறமும் நிழற்கூரை அமைக்கப்படவில்லை.
நிழற்கூரை இல்லாததால் நிறுத்தம் இல்லாத இடங்களில், குறிப்பாக இந்திராநகர் பகுதி ரோடு, தாராபுரம் ரோடு இணையும் இடத்திலும் பயணியர் காத்திருக்கின்றனர்.
இதனால் இரு பக்கத்திலிருந்து வரும் வாகன ஓட்டுநர்களும், திரும்புவதற்கு முடியாமல் இடையூறு ஏற்படுகிறது.
சில நேரங்களில் அதிவேகத்துடன் வாகனங்கள் வந்து திரும்பும்போது பயணியர் பாதிக்கப்படுகின்றனர். மழை நாட்களில் அவர்கள் நிற்பதற்கும் இடம் இல்லாமல் தவிக்கின்றனர். ஒதுங்கி நிற்பதற்கும், பஸ் நிறுத்தத்தை விட்டு சில தொலைவில் மட்டுமே கடைகள் இருப்பதால், மழையில் நனைந்த நிலையில் காத்திருக்கின்றனர்.
இந்திரா நகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை அமைப்பதற்கு உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.