ADDED : அக் 05, 2025 11:34 PM
உடுமலை; துாய்மை பணியாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி, திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் உடுமலை நகராட்சி நிர்வாகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனு: உடுமலை நகராட்சியில் 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பணிக்கான ஊழியர்கள், அவுட்சோர்சிங் ஒப்பந்த ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கை அடிப்படையில், ஊதிய உயர்வு வழங்க வேண்டும். துாய்மை பணியாளருக்கு ரூ. 744, குடிநீர் பணியாளர்களுக்கு ரூ. 833 தினசரி ஊதியமாக கணக்கிட்டு வழங்க வேண்டும். ஆனால், 2023 முதல் ரூ. 507 மட்டுமே கணக்கிட்டு வழங்கப்படுகிறது.
அரசு உத்தரவுபடி ஊதியம் வழங்க போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊழியர்களுக்கு 2023 முதல் கணக்கிட்டு நிலுவை தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.