/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புரோக்கர்களை கட்டுப்படுத்த கலெக்டரிடம் மனு
/
புரோக்கர்களை கட்டுப்படுத்த கலெக்டரிடம் மனு
ADDED : ஜன 23, 2025 11:47 PM
திருப்பூர் ; திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புரோக்கர்களை கட்டுப்படுத்தக் கோரி, குறைகேட்பு கூட்டத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்களுக்கு மனு எழுதிக்கொடுத்துவரும், 78 வயதான சண்முகவேலு, கலெக்டரிடம் அளித்த மனு:
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நான் மக்களுக்கு மனு எழுதிக்கொடுத்து வருகிறேன். இதற்காக, மக்கள் அளிக்கும் தொகையை பெற்றுக்கொள்கிறேன்; வசதியில்லாதோருக்கு, இலவசமாக மனு எழுதிக்கொடுக்கிறேன்.
மிக குறைந்த கட்டணத்திலும், இலவசமாகவும் மனு எழுதிக்கொடுப்பது பிடிக்காத இடைத்தரகர்கள் சிலர், என்னை மிரட்டுகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் வலம் வரும் இடைத்தரகர்கள், மனு எழுதுவதற்காக வரும் பொதுமக்களிடம், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு, இலவச வீட்டுமனை பட்டா பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறுகின்றனர்.
அதிகாரிகளுக்கு கொடுக்கவேண்டும் என கூறி, பொதுமக்களிடமிருந்து, ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கறந்து விடுகின்றனர். புரோக்கர்களிடம் சிக்கி, ஏராளமானோர் பெருந்தொகையை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்களை ஏமாற்றும் புரோக்கர்களை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

