ADDED : பிப் 28, 2024 11:46 PM
திருப்பூர்: நாளை (மார்ச் 1ம் தேதி) பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்குகிறது. இன்று பள்ளி, வகுப்பறை தேர்வுத்துறை வசம் ஒப்படைக்கப்படுகிறது.
மார்ச் 1ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. தேர்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. முதன்மை கண்காணிப்பாளர், வழித்தட அலுவலர், பறக்கும் படை குழுவினர் உள்ளிட்டோருக்கு கடந்த வாரம் பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. நேற்று முன்தினம், தேர்வரை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பபட்டனர்.
யார், யார் எந்தெந்த தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டும்; எவ்வாறு பணி மேற்கொள்ள வேண்டும்; தேர்வு துவங்கும் முன், தேர்வு முடிந்த பின் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்வு மையமாக மாற்றப்பட்டுள்ள பள்ளிகளின் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்ட பள்ளிக்கு செல்ல வேண்டும்.
இன்று, பள்ளி மற்றும் வகுப்பறை தேர்வு மையம், தேர்வறையாக மாற்றப்பட்டு, தேர்வுத்துறை அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்படும். இன்று தேர்வறைகளில் தேர்வர்களின் பதிவு எண் ஒட்டப்படும், துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு, தேவையான முன்னேற்பாட்டு பணி மேற்கொள்ளப்படும்.

