'டாஸ்மாக்' சூப்பர்வைசர் பலி
வெள்ளகோவில் உப்புபாளையத்தை சேர்ந்தவர் முருகப்பன், 56, மடாமேட்டில் 'டாஸ்மாக்' கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வெள்ளகோவிலில் இருந்து டூவீலரில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். செம்மாண்டம்பாளையம் அருகே டிப்பர் லாரி முருகப்பன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. கோவைஅரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாகஇறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
நிதி நிறுவன உரிமையாளர் மீது தாக்கு
திருப்பூர், மண்ணரை, பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் தங்கராஜ், 30; நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த இளம்பெண், கணவருக்கு தெரியாமல், இவரிடம் கடன் பெற்றிருந்தார். இதுகுறித்து அறிந்த கண வர் மணிகண்டன் மதுபோதையில் தங்கராஜை தாக்கினார். புகாரின் பேரில், வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
விபத்தில் வாலிபர் பலி
திருப்பூர், 63 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் சந்தீப், 30. இவர் புல்லட்டில் மங்கலம் சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். சுக்கந்தோட்டம் அருகே சென்ற போது, அதே ரோட்டில் வந்த சரக்கு வாகனம் புல்லட்டின்மீது மோதியது. அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பரிசோதனையில் அவர் இறந்தது தெரிந்தது. மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது
திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். ஆட்டோ ஸ்டாண்ட் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த வாலிபரிடம் விசாரித்தனர். அவரிடம், ஏழு கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மிலன் சுனி, 21 என்பதும், ரயிலில் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.
அரசு பஸ் மோதி வாலிபர் பலி
திருப்பூர் வாவிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன், 24. இவர் டூவீலரில் நேற்று மாலை திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி நோக்கி சென்றார். திருப்பூரில் இருந்து சேலத்துக்கு சென்றுகொண்டிருந்த அரசு பஸ், டூவீலர் மீது மோதியதில் பரிதாபமாக இறந்தார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.