ரயில் மோதி தொழிலாளி பலி இடுவம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா, 53; வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு காது கேட்காது. நேற்று முன்தினம் இரவு திருப்பூர் - வஞ்சிபாளையம் இடையே தண்டவாளத்தை கடக்கும் போது, எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ரயில் மோதி பரிதாபமாக இறந்தார். திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது திருப்பூர், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன், 36, மோகன்ராஜ், 35. அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இருவரும் நேற்று முன்தினம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே டாஸ்மாக் பாரில் மது அருந்தினர். அருகில் இருந்த குணா, 19, சரவணகுமார், 28 மற்றும் அப்பாஸ், 36 என, மூன்று பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இருவரையும் தாக்கினர். காயமடைந்த சரவணன், மோகன்ராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். திருப்பூர் வடக்கு போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர்.
விபத்தில் வாலிபர் பலி தஞ்சாவூர், திருவையாறுவை சேர்ந்தவர் பாக்யராஜ், 27. கோவையில் உள்ள மோட்டார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த, 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்று விட்டு, 18ம் தேதி டூவீலரில் கோவைக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, காங்கயம் போலீஸ் ஸ்டேஷன் எம்.ஜி.ஆர். பிரிவு அருகே வந்த போது, டூவீலருடன் நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தார். படுகாயமடைந்த அவரை மீட்டு காங்கயம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

