/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள்தொகை அடிப்படையில் குடிநீர் வினியோகம்; பல்லடம் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு
/
மக்கள்தொகை அடிப்படையில் குடிநீர் வினியோகம்; பல்லடம் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு
மக்கள்தொகை அடிப்படையில் குடிநீர் வினியோகம்; பல்லடம் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு
மக்கள்தொகை அடிப்படையில் குடிநீர் வினியோகம்; பல்லடம் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 22, 2025 11:12 PM
பல்லடம்; மக்கள் தொகை அடிப்படையில் குடிநீர் வினியோகத்தை சீராக்க வேண்டும் என, பல்லடம் வட்டார பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல்லடம் வட்டாரத்தில், விசைத்தறி, கறிக்கோழி உற்பத்தி, சாய ஆலைகள், பஞ்சு நுால் மில்கள், விவசாயம் என, பலதரப்பட்ட தொழில்கள் பரவலாக நடந்து வருகின்றன.
இத்தொழில்களை சார்ந்து, வேலைவாய்ப்பும் அதிகரித்து வருவதால், பல்லடம் வட்டாரத்தின் மக்கள் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், குடிநீர், ரோடு வசதி, தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய் உட்பட அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டி உள்ளது.
இவற்றில், குடிநீர் தேவைதான் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் முதன்மையானதாக உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வினியோகிப்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் கடமை.
ஆனால், பல்லடத்தில் பழைய மக்கள் தொகை அடிப்படையிலேயே குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதால், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
பல்லடம் வட்டாரத்துக்கு, அத்திக்கடவு மற்றும் பில்லுார் கூட்டு குடிநீர் திட்டங்களின் கீழ் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இத்துடன், மக்கள்தொகை அதிகம் உள்ள கரைப்புதுார், ஆறுமுத்தாம்பாளையம், கணபதிபாளையம் ஊராட்சிகளுக்கு, மேட்டுப்பாளையம் கூட்டு குடிநீர் மற்றும் எல்&டி., குடிநீர் ஆகியவையும் வினியோகிக்கப்படுகின்றன. கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2.45 லட்சம் மக்கள் வசிப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
தற்போது, பல்லடம் வட்டாரத்தில், 3.60 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதுதவிர, தொழில், வியாபாரம், வேலை என, பல லட்சம் பேர், சுழற்சி முறையில் வந்து செல்கின்றனர்.
இதனால், குடிநீர் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், பழைய மக்கள் தொகை அடிப்படையிலேயே குடிநீர் வினியோகிக்கப்படுவதால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் ரோட்டுக்கு வரவேண்டிய சூழல் ஏற்படுகிறது.
குழாய் உடைப்பு, குடிநீர் திருட்டு, முறைகேடான குடிநீர் இணைப்பு என, பல்வேறு காரணங்களால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது ஒருபுறம் இருக்க, பொதுமக்களுக்கு முறையாக வழங்கப்பட வேண்டிய குடிநீரும் கிடைப்பதில்லை.
எனவே, தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீரை உயர்த்தி வழங்க வேண்டும். மூன்று ஊராட்சிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் மேட்டுப்பாளையம் குடிநீர் திட்டத்தை, பல்லடம் வட்டாரம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் விரிவுபடுத்த வேண்டும்.