/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டோரம் பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்
/
ரோட்டோரம் பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜூலை 08, 2025 11:58 PM
பொங்கலுார்; திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் நில மதிப்பு உயர்ந்துள்ளது. புதிதாக நிலம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அவ்வாறு நிலம் வாங்கியவர்கள் உயிர் வேலியை அழித்துவிட்டு கம்பி வேலி அமைக்கின்றனர். கம்பி வேலி அமைக்கும் காண்ட்ராக்டர்கள் நிலத்தை தோண்டி கல் நடுவதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இதற்காக ரோட்டு மண்ணை தோண்டி வேலி ஓரத்தில் குவிக்குமாறு வற்புறுத்துகின்றனர். நில உரிமையாளர்களும் ரோட்டு மண்ணை சுரண்டி தங்கள் நிலத்தின் வேலி ஓரத்தில் கொட்டுகின்றனர். இதனால், ரோட்டோரத்தில் பெரும்பள்ளம் உருவாகிறது.
தார் ரோடு அமைக்கும் போது, நெடுஞ்சாலை துறையும் தங்கள் பங்குக்கு ரோட்டோர மண்ணை சுரண்டி ரோட்டுக்கு கொட்டுகிறது. இதனால், ரோட்டோரத்தில் மேலும் பள்ளம் உருவாகிறது. தனியாரும், நெடுஞ்சாலை துறையும் போட்டி போட்டுக் கொண்டு ரோட்டு மண்ணை சுரண்டுவது அதிகரித்து வருகிறது. இதனால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் கொஞ்சம் அசந்தாலும் பள்ளத்தில் விழுந்து உயிரிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு ரோட்டு மண்ணை சுரண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கிராமப்புற ரோடுகளையும் ஆய்வு செய்து, விதிமுறை மீறலில் ஈடுபட்டவர்களை செய்த தவறுக்கு பொறுப்பேற்க வைக்க வேண்டும். பள்ளமான இடத்தில் மீண்டும் மண்ணை கொட்டி சமன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.