/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜம்புக்கல் மலையை மீட்க 10வது நாளாக போராட்டம்: 22ம் தேதி முத்தரப்பு கூட்டம்
/
ஜம்புக்கல் மலையை மீட்க 10வது நாளாக போராட்டம்: 22ம் தேதி முத்தரப்பு கூட்டம்
ஜம்புக்கல் மலையை மீட்க 10வது நாளாக போராட்டம்: 22ம் தேதி முத்தரப்பு கூட்டம்
ஜம்புக்கல் மலையை மீட்க 10வது நாளாக போராட்டம்: 22ம் தேதி முத்தரப்பு கூட்டம்
ADDED : டிச 20, 2025 08:59 AM
உடுமலை: உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக, ஆண்டியகவுண்டனுாரில், 2,770 ஏக்கர் பரப்பளவில் ஜம்புக்கல் மலை அமைந்துள்ளது.
1962ம் ஆண்டு, காப்புக்காடாக அறிவிக்கப்பட்ட நிலையில், 1971ம் ஆண்டு, சமதளப்பரப்பில், 314.21 ஏக்கர் நிலம் தீர்வை ஏற்படுத்தப்பட்ட தரிசாக மாற்றப்பட்டு, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு, நிலத்தை ஆழ தோண்டக்கூடாது, மரங்களை வெட்டக்கூடாது உள்ளிட்ட ஏராளமான விதி முறைகளுடன் கண்டிசன் பட்டா வழங்கப்பட்டது.
இந்நிலையில், சட்டத்திற்கு புறம்பாகவும், போலி ஆவணங்கள் வாயிலாகவும் தனியார் ஆக்கிரமித்து, அரசுக்கு சொந்தமான ஒட்டுமொத்த மலையையும், கன ரக அகழ்வு இயந்திரங்கள் வாயிலாக அழித்து வருவதாக விவசாயிகள் அரசு துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக உள்ளதைக்கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், மலையடிவாரத்தில், கடந்த, 10ம் தேதி முதல், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சு வார்த்தை உடுமலை டி.எஸ்.பி., நமச்சிவாயம், துணை தாசில்தார் தினேஷ்ராகவன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, ஆவணங்கள் இருப்பவர்கள் மட்டும், பேசுங்கள் என அதிகாரிகள் கூறியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
முறையாக அளவீடு செய்யாமல், அரசு மற்றும் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை அழித்தவர்களிடம், கண்டிசன் பட்டாவை எந்த அடிப்படையில் விலைக்கு வாங்கினார். அவரிடம் உள்ள ஆவணங்களையும் கேட்காமல், விவசாயிகளையும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் மிரட்டுவதில் நியாயமில்லை.
மலையை முழுவதுமாக அழித்து, இறந்தவர்கள் உயிரோடு இருப்பதாக போலி கிரையம் செய்துள்ளனர். விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை அபகரித்தவர்கள் மீதும், பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்து வழங்கவும், அரசுக்கு சொந்தமான மலையையும் மீட்க வேண்டும், என தெரிவித்தனர்.
இதனையடுத்து, வரும் 22ம் தேதி, கோட்டாட்சியர் அலுவலகத்தில், அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள், போலீசார் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். அதுவரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

