/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு
/
அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு
ADDED : செப் 29, 2024 06:41 AM

உடுமலை, : உடுமலை அமராவதி அணையில் இருந்து, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 47,117 ஏக்கர் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அமராவதி பழைய ஆயக்கட்டு, 8 ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட, 7,520 ஏக்கருக்கு ஜூன், 24 முதல் நீர் வழங்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழையால், கடந்த, ஜூலை, 18ம் தேதி அணை நிரம்பி, தொடர்ந்து, இரு மாதமாக அணையிலிருந்து உபரி நீர், ஆறு மற்றும் பிரதான கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், மீதமுள்ள பாசன நிலங்களுக்கும் நீர் திறக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நேற்று நீர் திறக்கப்பட்டது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
பழைய ஆயக்கட்டு, அலங்கியம் முதல் கரூர் வரையிலான, 10 வலது கரை கால்வாய்கள் வாயிலாக பாசன வசதி பெறும், 21,867 ஏக்கர் நிலங்களுக்கு, ஆற்று மதகு வழியாக, 700 கன அடி வீதம், 4,233.6 மில்லியன் கனஅடி நீரும், புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்களுக்கு, வினாடிக்கு, 440 கனஅடி வீதம், 2,661.12 கனஅடி நீர் என, நேற்று முதல், வரும், 2025 பிப்.,9 வரை, 135 நாட்களில், 70 நாட்கள் தண்ணீர் திறப்பு, 65 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற அடிப்படையில், சுழற்சி முறையில் தேவைக்கேற்ப திறக்கப்படும்.
இதன் வாயிலாக, இரு மாவட்டங்களிலுள்ள, 47,117 ஏக்கர் நிலங்களுக்கு, 6,894.72 மில்லியன் கனஅடி நீர் பாசனத்திற்கு வழங்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணை நீர்மட்டம்
அமராவதி அணையில், நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடி உயரத்தில், 87.14 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,789.27 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.