/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுவர் விளம்பரங்கள் போஸ்டர்கள் அகற்றம்
/
சுவர் விளம்பரங்கள் போஸ்டர்கள் அகற்றம்
ADDED : மார் 18, 2024 12:50 AM
பல்லடம்;தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவை தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் அரசியல் கட்சி சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள், நேற்று முன்தினம் முதலே அமலுக்கு வந்தன. இதன்படி, மாவட்டத்தில், பொது இடங்களில் உள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சி போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு, கொடிக்கம்பங்கள், பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணியும் துவங்கியது.
முன்னதாக, தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே, சில அரசியல் கட்சியினர் தங்களது கொடிக்கம்பங்களை தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொண்டனர். மேலும், பல்லடம் நகராட்சி பணியாளர்கள், நகரப் பகுதியில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களை கிழித்தும், கொடிக்கம்பங்கள், பிளக்ஸ் பேனர்களை அகற்றியும், சுவர் விளம்பரங்களை அழிப்பதுமான நடவடிக்கைகளில் நேற்று ஈடுபட்டனர்.
இருப்பினும், பெரும்பாலான இடங்களில் இன்னும் விதிமுறை பின்பற்றப்படாமல், அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், விளம்பரங்கள், போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்கள் ஆக்கிரமித்துள்ளன. ''அரசியல் கட்சியினரே முன்வந்து இந்தச்செயல்களில் ஈடுபட்டால் நல்லது'' என்று எதிர்பார்க்கின்றனர்.
அரசியல் கட்சியினர் செவிமடுக்காதபோது, அரசியல் கட்சிகளின் பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை முழுமையாக மாவட்ட நிர்வாகமே அகற்றியாக வேண்டும்.

