/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேரூராட்சிகளில் தொழிலாளர்கள் பாதிப்பு திட்டம் செயல்படுத்த கோரிக்கை
/
பேரூராட்சிகளில் தொழிலாளர்கள் பாதிப்பு திட்டம் செயல்படுத்த கோரிக்கை
பேரூராட்சிகளில் தொழிலாளர்கள் பாதிப்பு திட்டம் செயல்படுத்த கோரிக்கை
பேரூராட்சிகளில் தொழிலாளர்கள் பாதிப்பு திட்டம் செயல்படுத்த கோரிக்கை
ADDED : மார் 10, 2026 05:33 AM
உடுமலை: விவசாயம் சார்ந்த பேரூராட்சிகளில், வேலை உறுதி திட்டத்தை அரசு செயல்படுத்தாமல் விட்டுள்ளதால், கோடை காலத்தில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி பாதித்து வருகின்றனர்.
உடுமலை பகுதியில் தளி, மடத்துக்குளம் பகுதியில், கணியூர், சங்கராமநல்லுார், மடத்துக்குளம், குமரலிங்கம் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன.
இந்த பேரூராட்சிகளில், அருகிலுள்ள ஊராட்சிகளை போல தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்த பேரூராட்சிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளது. குறிப்பாக, நெல் மற்றும் தென்னை சாகுபடி அதிகளவு உள்ளது.
இச்சாகுபடிகளில், குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பிற நாட்களில், தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
எனவே, பேரூராட்சிகளிலும், வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன், நீர்நிலைகள் அமைந்துள்ள பேரூராட்சிகளில் நகர்ப்புற வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.
தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், விவசாயம் சார்ந்த பணிகள் இல்லாமல், தொழிலாளர்கள் பாதித்துள்ளனர்.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்கவில்லை. விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்தி, வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: பேரூராட்சிகளில் வசிப்பதால், பல்வேறு திட்டங்கள் நேரடியாக எங்களுக்கு கிடைப்பதில்லை. விவசாய பணிகள் இல்லாத போது மிகுந்த சிரமப்படுகிறோம்.
இத்தருணத்தில் வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்தினால், நீர்நிலைகள் பராமரிப்பு உட்பட பணிகள் வாயிலாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

