/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வருவாய் கிராம ஊழியர்கள் போராட்டம்
/
வருவாய் கிராம ஊழியர்கள் போராட்டம்
ADDED : பிப் 05, 2025 11:32 PM

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர், தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில், காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
கிராம உதவியாளர் இறந்தால், அந்த குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்கப்பட்டது. கடந்த, 23 ஆண்டு காலமாக இருந்த வாரிசு வேலை திட்டத்தை நிறுத்தம் செய்ததை, திரும்ப வழங்க வேண்டும்.
கடந்த, 2007ம் ஆண்டுக்கு பின், பணிக்கு வந்த சி.பி.எஸ்., திட்டத்தில் பணி பார்த்து ஓய்வு பெற்று இறந்த கிராம உதவியாளருக்கு, பிடித்தம் செய்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
புதிதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு, சி.பி.எஸ்., எண் நிரந்தரமாக வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களை, கிராம பணி தவிர மாற்றுபணிகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு, தாலுக்கா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில், நேற்று மாலை 3:00 முதல் 6:00 மணி வரை மூன்று மணி நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது, 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்ட தலைவர் பழனிசாமி, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சுப்ரமணியம் ஆகியோர் பேசினர்.
உடுமலை
மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில், வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், காத்திருப்பு போராட்டம் நடந்தது.
வட்ட தலைவர் கருப்புச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் பொன்னுச்சாமி, பொருளாளர் ராஜலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம், வாரிசு வேலை, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
- நிருபர் குழு -