/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குட்டைக்குள் ரோடு கலெக்டர் ஆய்வு
/
குட்டைக்குள் ரோடு கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 23, 2025 12:44 AM

திருப்பூர்:அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுவச்சேரியில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 35 ஏக்கர் பரப்பிலான குளம் உள்ளது. மழையின் போது, மாரப்பாளையம் குட்டையில் நிரம்பும் தண்ணீர், வழிந்தோடி தளிஞ்சிப்பாளையம் வந்து, பின் நடுவச்சேரி குட்டைக்கு செல்கிறது.
இதனால், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது.கடந்த 2018ல், நடுவச்சேரி கோதை பிராட்டீஸ்வரர் கோவில் முதல் சிலுவைபுரம் வரை, 2.5 கி.மீ., நீளம், அவிநாசி ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து, தார் ரோடு அமைக்கப்பட்டது. ரோடு அமைக்கப்பட்ட இடம் பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறைக்கு சொந்தமான குட்டை.
குட்டைக்குள் ரோடு அமைப்பதன் வாயிலாக, பெருமழை காலங்களில் நடுவச்சேரி குளத்துக்கு நீர் செல்வது தடைபடும்; இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகேயுள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகும் என்ற ஆட்சேபனை கிளம்பியது; கலெக்டர் துவங்கி, முதல்வரின் தனிப்பிரிவு வரை மக்கள் மனு வழங்கியும், எவ்வித பலனுமில்லை; அந்த ரோடு, மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.
குடியிருப்புக்குள்
புகுந்த மழைநீர்
'பெருமழை வந்தால் வெள்ளப் பெருக்கு ஏற்படும்' என்ற அச்சுறுத்தல், 'புலி வருது கதை'யாக இருந்து வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன் பெய்த பெரு மழையில், மாரப்பம்பாளையம் குட்டை நிரம்பி நீர் வெளியேறி, நடுவச்சேரி குட்டையை நோக்கி பயணித்த போது, இடையில் பாதை தடைபட்டதால், திசைமாறி அருகேயுள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது.நீர்வளத்துறைக்கு சொந்தமான குட்டையை ஆக்கிரமித்து, மக்கள் வரிப்பணத்தில் ரோடு அமைக்கப்பட்ட விவகாரம், தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தையும், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கலெக்டர் மனிஷ் நாரணவரே நேற்று பார்வையிட்டு, விளக்கம் கேட்டறிந்தார். கருமாபாளையம் உள்ளிட்ட மழை பாதிப்பு ஏற்பட்ட இடங்களையும் பார்வையிட்டார்.---
நடுவச்சேரி மாரப்பம்பாளையம் குட்டையை கலெக்டர் மனிஷ் நாரணவரே ஆய்வு செய்தார்.