/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலத்தை இணைக்கும் சாலைகள் பல்லாங்குழி
/
பாலத்தை இணைக்கும் சாலைகள் பல்லாங்குழி
ADDED : பிப் 05, 2026 04:47 AM

திருப்பூர்: திருப்பூரில் ரயில்வே பாலத்துடன் இணைக்கும் சாலைகள் பல்லாங்குழிகளாக உள்ளன.
திருப்பூரை ரயில் தண்டவாளம் இரண்டாக பிரிக்கிறது. தெற்கு பகுதியில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்க ரயில்வே மேம்பாலம் தவிர்த்து இரண்டு ரயில்வே பாலங்கள் உள்ளன. இவற்றின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான டூவீலர், இலகுரக வாகனங்கள் பயணிக்கின்றன.
சிமென்ட் சாலை சேதமடைந்து பல்லாங்குழியாகியுள்ளது. இரண்டு மாதமாகியும் நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. தினசரி அவ்வழியாக சென்று திரும்பும் வாகன ஓட்டிகள் விலா எலும்பு வலியுடன் திரும்புகின்றனர்.ராயபுரம், சூசையாபுரம் பகுதியை காலேஜ் ரோட்டுடன் மரக்கடை ஸ்டாப்பில் உள்ள ரயில்வே பாலம் இணைக்கிறது.
இந்த பாலத்தின் கீழ் போடப்பட்ட சிமென்ட் ரோடு மழையால் அரித்து முற்றிலும் பெயர்ந்து விட்டது. ஜல்லிக்கற்கள் மேலே எழும்புகின்றன. டூவீலர், கார், ஆட்டோ உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் கூட விரைவாக கடந்து செல்ல முடியவில்லை.அருகிலேயே திறந்த நிலையில் பெரிய சாக்கடை கால்வாய் நிறைய கழிவுநீருடன் ஓடிக் கொண்டிருப்பதால், இடதுபுறம் முன்னேறி செல்லவும் வழியில்லை.
வலதுபுறம் செல்ல அனைத்து வாகனங்களும் காத்திருக்கின்றன. சேதமான சாலை குழியில் வாகனங்கள் இறங்கி ஏறி, மெதுவாக கடந்து செல்வதால், பீக்ஹவர்ஸில் தொடர்ந்து வரும் வாகனங்கள், 15 - 25 நிமிடம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
விபத்து அபாயம்திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டுடன் கொங்கு நகர் மெயின் ரோடு, குத்துாஸ்புரம், புதுராமகிருஷ்ணாபுரம், டி.பி.ஏ. காலனி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பாலமாக ஒற்றைக்கண் ரயில்வே பாலம் உள்ளது.
கனரக வாகனங்கள் செல்லாமல் இருக்க, இப்பாலத்தில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அத்தடுப்பின் கீழ் சாலை 10 அடி நீளத்துக்கு சேதமாகியுள்ளது. கான்கிரீட் பெயர்ந்து குழியாக உள்ளது. வலதுபுறம் சென்று கொண்டிருக்கும் வாகன ஓட்டிகள், குழியில் பைக் இறங்காமல் இருக்க திடீரென இடதுபுறம் திரும்புகின்றனர்.
பின்தொடர்ந்து வரும் வாகனங்கள் சுதாரிப்பதற்குள் தினம் ஒரு விபத்து நேரிடுகிறது.ஈரோடு - கோவை மெயின் லைன் ரயில் போக்குவரத்து அதிகம் என்பதால், பெரும்பாலான நேரங்களில் அருகில் உள்ள ரயில்வே கேட் பூட்டியே கிடக்கிறது.
ரயில் தண்டவாளத்தை கடக்க ஒற்றைக்கண் பாலம் தான் பிரதான சாலை என்பதால், ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயணிக்கின்றனர். ஆனால், சாலையின் நிலை இப்படி உள்ளதை நெடுஞ்சாலைத்துறையினரோ, மாநகராட்சியோ கண்டுகொள்ளவில்லை. தினசரி சேதமான சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகளின் விலா எலும்பு வலியே ஏற்பட்டு விடுகிறது.

