/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல்
ADDED : ஜன 08, 2025 12:26 AM

திருப்பூர்; காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவது உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சாந்தி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள். 40 பேர், கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போலீசார் அவர்களிடம், 'அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் நடத்தக்கூடாது,' என்றனர். இதனால், போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின், ஊரக வளர்ச்சி அலுவலர்கள், பல்லடம் ரோட்டில் நடுவே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மவட்ட செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப தொடர்ந்து வலியுறுத்தியபோதும், அரசு செவிசாய்க்காமல் உள்ளது.
பரப்பளவு, மக்கள் தொகை அதிகமுள்ள ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகளை பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. செய்ய வேண்டியதையெல்லாம் விட்டுவிட்டு, நகரை ஒட்டியுள்ள கிராமப்புறங்களை கொண்ட ஊராட்சிகளை, மாநகராட்சி, நகராட்சிகளுடன் இணைத்துக் கொண்டிருக்கின்றனர்.
எங்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம். இல்லாவிடில், காலவரையற்ற வேலை நிறுத்த போராட் டம் நடத்துவோம். இவ்வாறு, அவர் கூறினார்.