/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயற்கை இழை ஆடை உற்பத்திக்கு ஊக்குவிப்பு; மத்திய ஜவுளி அமைச்சரிடம் சக்திவேல் வேண்டுகோள்
/
செயற்கை இழை ஆடை உற்பத்திக்கு ஊக்குவிப்பு; மத்திய ஜவுளி அமைச்சரிடம் சக்திவேல் வேண்டுகோள்
செயற்கை இழை ஆடை உற்பத்திக்கு ஊக்குவிப்பு; மத்திய ஜவுளி அமைச்சரிடம் சக்திவேல் வேண்டுகோள்
செயற்கை இழை ஆடை உற்பத்திக்கு ஊக்குவிப்பு; மத்திய ஜவுளி அமைச்சரிடம் சக்திவேல் வேண்டுகோள்
ADDED : ஜூலை 12, 2025 12:27 AM

திருப்பூர்; 'செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, 30 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்கவேண்டும்,' என, மத்திய அமைச்சரிடம், ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் கோரிக்கை வைத்துள்ளார்.
கோவைக்கு நேற்று வந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ்சிங்கை சந்தித்த ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) துணை தலைவர் சக்திவேல், அவரிடம்முன்வைத்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:
விருதுநகர் மாவட்டத்தில் அமைய உள்ள பி.எம்., மித்ரா தொழில் பூங்கா மேம்பாட்டு திட்டத்துக்கு, 1,894 கோடி ரூபாய் வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது.
உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு கொண்ட தொழில் பூங்காவை அமைத்து, ஜவுளித்துறையின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் இந்த திட்டம், உலகளாவிய ஜவுளித்துறையில்,இந்தியாவின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும்; அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 40 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், திருப்பூரின் பங்களிப்பு 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக அளவில், 80 சதவீதம் செயற்கை நுாலிழை ஆடைகளே பயன்படுத்தப்படுகிறது.
இவ்வகை ஆடை உற்பத்தியை பெருக்குவதற்கு, இங்கிலாந்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கைகொடுக்கும்.
செயற்கை நுாலிழை மற்றும் துணி ரகங்கள் இறக்குமதியை எளிமைப்படுத்த வேண்டும். இதனால், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், குறிப்பிட்ட காலத்துக்குள் ஆர்டர்களை உறுதி செய்யமுடியும்.
ஆடை உற்பத்தி சங்கிலியில் உள்ள நிறுவனங்களுக்கு, 25 சதவீதம் மூலதன மானியம் வழங்கவேண்டும். செயற்கை நுாலிழை துணி மற்றும் பிராசசிங், ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, 30 சதவீதம் முதலீட்டுஉதவித்தொகை வழங்கவேண்டும்.
இவ்வாறு, சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

