/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீர் தேவையில் தன்னிறைவு சாத்தியம்
/
தண்ணீர் தேவையில் தன்னிறைவு சாத்தியம்
ADDED : அக் 26, 2025 03:06 AM

தமிழகத்தின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு, ஆண்டுக்கு, 979.3 மி.மீ.; இருப்பினும், பல இடங்களில் வறட்சி தென்படுகிறது. தண்ணீர் தேவையில் தன்னிறைவு பெறுவதில் சிக்கல் இருந்துகொண்டு தான் இருக்கிறது. 'இதற்கெல்லாம் ஒரே தீர்வு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் செறிவூட்டுவது தான் ஒரே வழி' என்கிறார், 'தமிழக தண்ணீர் தன்னிறைவு திட்டம்' ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரபு.
தமிழக அரசுக்கு அவர் அனுப்பியுள்ள விரிவான அறிக்கை குறித்து அவர் பகிர்ந்தவை:
நீரியியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள், பொறியாளர்கள் என பல தரப்பினரின் கருத்து மற்றும் யோசனை அடிப்படையில், நீர் தேவையில் தமிழகம் தன்னிறைவு பெறுவதற்கான திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
ஒட்டு மொத்தமாக தமிழகத்தின் நீராதாரம் மட்டுமின்றி, விவசாயம் செழிக்க ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்டம் மட்டுமே உதவும். தற்போதுள்ள, குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டு குடிநீர் திட்ட கட்டமைப்பு சிதையாத வகையில், மழை மற்றும் வெள்ளக்காலங்களில் கூடுதலாக வெளியேறும் உபரிநீரை, நீர் நிலைகளுக்கு செறிவூட்டும் வகையிலான கட்டமைப்பை ஏற்படுத்துவதன் வாயிலாக, தண்ணீர் தேவையில் தன்னிறைவு பெற முடியும். இதன் வாயிலாக, இழந்த நீர்நிலைகளின் பயன்பாடு மீண்டும் உயிர்பெறும். இதுதான் திட்டம்
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நீர் நிலைகளுக்கு நீர் செறிவூட்டல் கட்டமைப்பை ஏற்படுத்த, அதிக செலவு ஏற்படும் என்பதால், ஏற்கனவே உள்ள குடிநீர் திட்டத்தில் தேவையான சில மாறுதல்களை செய்வதன் வாயிலாக இத்திட்டத்தை செயல்படுத்த முடியும்.நமது கூட்டு குடிநீர் திட்டங்கள், கடந்த, 1970களில் இருந்து சிரத்தையுடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 96 சதவீத இடங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாக நீர் வினியோகிக்கப்படுகிறது. அதாவது, நீர் நிலைகளில் இருந்து பெறப்படும் நீரை, சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு சென்று, நீரை சுத்திகரித்து, அந்த நீரை அந்தந்த ஊர்களில் தரைமட்ட மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் நிரப்பி, பின் குழாய் வழியாக மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெருமழை, வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் வெளியேறும் உபரிநீரை, அந்தந்த பகுதியில் உள்ள குடிநீர் திட்டங்கள் செய்யல்படுத்தப்படும் குழாயை ஒட்டியவாறே தனியாக மற்றொரு குழாய் இணைப்பை பொருத்தி, ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளுடன் இணைக்க வேண்டும். வெளியேறும் உபரி நீரை அந்த குழாய் வழியாக நீர் நிலைகளில் நிரப்புவதன் வாயிலாக, அப்பகுதியில் நீர் செறிவூட்டப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
கைகொடுக்கும்
தொழில்நுட்பம்
இத்திட்டம் நிறைவேற, முதலில் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை, 'ரிமோட் சென்சார்' தொழில்நுட்ப உதவியுடன் அளவிட வேண்டும்; நீர்நிலைகள் உள்ள இடம், தரவுகள் சார்ந்து உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற நீர் நிலைகள், சுருங்கியுள்ள மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகளை கண்டறிந்து, அதன் இடம் சார்ந்த தரவுகளை, புவிசார் குறியீடு வாயிலாக ஆவணப்படுத்த வேண்டும்.
குளம், குட்டை, ஆறுகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெள்ளம் வந்தால் அதை 'சென்சார்' செய்து, வெளியேறும் உபரிநீரை, பம்பிங் செய்யும் தானியங்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும். நள்ளிரவில், திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலும், ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் அந்த நீரை, சென்சார் தொழில்நுட்ப உதவியுடன் தானியங்கி முறையில், நீர் செறிவூட்டலுக்கு திருப்பிவிட முடியும்.
ஒட்டு மொத்த தமிழகத்துக்குமான இந்த நீர் மேலாண்மை திட்டத்தை ஒரே இடத்தில் இருந்து கம்ப்யூட்டர் வாயிலாக கண்காணிக்கும் வகையிலான தொழில்நுட்பம் வந்துவிட்டது. இத்திட்டம் நிறைவேற, சோலார் ஆற்றல் திட்டத்தை பயன்படுத்துவதன் வாயிலாக, மின் சார்ந்த செலவினம் இருக்காது. இத்திட்டம், மிகப்பெரும் நீர் மறுமலர்ச்சி திட்டமாக இருக்கும்; இருக்கின்ற நீர் மேலாண்மை கட்டமைப்பையே இத்திட்டத்துக்கும் பயன்படுத்துவதன் வாயிலாக, செலவினம் பெருமளவு குறையும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
---
திருப்பூர், ஆண்டிபாளையத்தில் உள்ள குளம், ஆண்டு முழுக்க நீர் நிறைந்து காணப்படுகிறது. குளத்தில் ஏற்பட்டுள்ள தீவுகளில் கொக்குகள் ஓய்வெடுக்கின்றன.
---
பிரபு

