sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 குளறுபடிகளுடன் சிறப்பு முகாம்கள் ;முன்னறிவிப்பு இல்லை... அலுவலர்கள் மாயம்... வாக்காளர்கள் தவிப்பு

/

 குளறுபடிகளுடன் சிறப்பு முகாம்கள் ;முன்னறிவிப்பு இல்லை... அலுவலர்கள் மாயம்... வாக்காளர்கள் தவிப்பு

 குளறுபடிகளுடன் சிறப்பு முகாம்கள் ;முன்னறிவிப்பு இல்லை... அலுவலர்கள் மாயம்... வாக்காளர்கள் தவிப்பு

 குளறுபடிகளுடன் சிறப்பு முகாம்கள் ;முன்னறிவிப்பு இல்லை... அலுவலர்கள் மாயம்... வாக்காளர்கள் தவிப்பு


ADDED : நவ 17, 2025 01:32 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த முகாம்களில், பெரும் குளறுபடி காணப் பட்டது. முறையான முன்னறி விப்பு இல்லை; அலுவலர்கள் வரவில்லை என வாக்காளர்கள் குற்றம் சாட்டினர்.

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம், கடந்த 4ம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் வீடு தேடிச் சென்று தீவிர திருத்த படிவம் வழங்கும் பணிகளில், 2,536 பி.எல்.ஓ.,க்கள்(ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள்) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் தொகுதிகளில், பி.எல்.ஓ.,க்கள் பலர், கோவில் உள்ளிட்ட பொது இடங்கள், மளிகைக்கடைகளில் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு, மக்களை வரவழைத்து மனுக்களை வழங்கியும், பூர்த்தி செய்த மனுக்களை பெற்றும் வருகின்றனர்.

'கடமை'க்காக பிரசாரம் நேற்றுமுன்தினமும், நேற்றும் ஓட்டுச்சாவடி மையங்களில், தீவிர திருத்தத்ததுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஆனால், முகாம் தொடர்பாக, மாவட்ட தேர்தல் பிரிவு மூலமோ, சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களாலோ, முறையான முன்னறிவிப்பு செய்யப்படவில்லை.

அரசியல் கட்சியினர் பரப்பிய தகவலின்பேரிலேயே, வாக்காளர் பலரும் முகாம் தொடர்பாக அறிந்துகொண்டனர். பல பகுதிகளில், முகாம் தொடர்பாக, நேற்று காலையில்தான் ஆட்டோவில் பிரசாரம் செய்யப்பட்டது.சொற்ப எண்ணிக்கையிலான வாக்காளரே முகாமுக்கு வந்தனர்.

நடக்காத முகாம்கள் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படாததால், பல ஓட்டுச்சாவடி மையங்களில் முகாமே நடத்தப்படவில்லை; சில ஓட்டுச்சாவடிகளில் முகாம் நடத்தியபோதும், பி.எல்.ஓ.,க்களே 'ஆப்சென்ட்' ஆகினர்.

நடைமுறைச் சிக்கல்கள் திருப்பூரில் பனியன் தொழிலாளரே அதிகம் உள்ளனர். காலையில் வேலைக்குச் செல்வோர், மாலை, இரவு நேரங்களிலேயே வீடு திரும்புகின்றனர். வாடகை வீடுகளில் வசிப்போர், திடீரென வேறு முகவரிக்கு செல்கின்றனர். குறுகிய நாட்களுக்குள் அனைத்து வாக்காளருக்கும் வீடு தேடிச் சென்று படிவம் வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அந்தவகையில், தீவிரத் திருத்த படிவம் வழங்கல் மற்றும் பெறுவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்துவது, அவசியம்தான்.

அதேநேரம், முறையான முன்னறிவிப்பின்றி, சில ஓட்டுச்சாவடிகளில் மட்டும் முகாம் நடத்துவதாலும், பி.எல்.ஓ.,க்களே ஆப்சென்ட் ஆவதாலும் வாக்காளர்களுக்கு வீண் அலைச்சலும், குழப்பமுமே ஏற்படுகிறது.

எழும் சந்தேகங்கள் தங்கள் ஓட்டுச்சாவடியில் முகாம் நடைபெறுமா; பி.எல்.ஓ. வந்திருப்பாரா; முகாமை தவறவிட்டால், படிவம் கைக்கு வந்து சேருமா என்கிற சந்தேகங்கள் ஏற்படுகின்றன. மாவட்ட நிர்வாகம், அந்தந்த வாக்காளர் உதவி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, முறையான முன்னறிவிப்பு செய்து சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்பது, வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் கோரிக்கையாக உள்ளது.

மக்கள் மனசு படிக்காதோருக்கு சிரமம் கார்த்திகேயன், புதுார் ரோடு, திருப்பூர்: செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு, இதுபோன்ற சிறப்பு தீவிர திருத்தம் அவசியம்தான். ஆனால், தீவிர திருத்தத்துக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்தான் போதுமானதாக இல்லை. பெரும்பாலானோருக்கு, தீவிர திருத்த படிவத்தை எப்படி பூர்த்தி செய்யவேண்டும்; 2002 வாக்காளர் பட்டியல் விவரங்களை தேர்தல் கமிஷன் தளத்திலிருந்து எப்படி பெறவேண்டும் என்பதெல்லாம் தெரியவில்லை. படித்தவர்களுக்கு பிரச்னையில்லை என்றாலும், படிப்பறிவில்லாதோர், முதியவர்களுக்கு சிரமம் ஏற்படும். தீவிரத் திருத்த படிவம் வழங்குவதற்காக முகாம் நடத்துவது குறித்த தகவல்கள் வாக்காளரை சென்றடையவில்லை. முகாம் நடத்தும்பட்சத்தில், முன்னரே திட்டமிட்டு, ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கவேண்டும். கஷ்டங்களை உணருங்கள் மணிகண்டன், புதுார் ரோடு, திருப்பூர்: கோவில்வழி ஆதிதிராவிடர் நல பள்ளியில் தீவிர திருத்த படிவம் வழங்கும் முகாம் நடப்பதாக, காலையில்தான் தெரிந்தது. மற்ற நாட்களில் வேலைக்குச் சென்றுவிட்டு, பணி முடிந்து வீடு திரும்ப இரவு நேரமாகிவிடும். விடுமுறை நாள் என்பதால், படிவத்தை வாங்கி, உடனே பூர்த்தி செய்து கொடுத்துவிடலாம் என, ஓட்டுச்சாவடிக்கு வந்தேன். எனது ஓட்டுச்சாவடிக்கான பி.எல்.ஓ., முகாமுக்கு வராததால், படிவம் பெறமுடியவில்லை. படிவம் பெறுவதற்காக, வேறொரு நாள் பணிக்கு விடுப்பு எடுக்கவேண்டிவருகிறது. முறையாக முன்னறிவிப்பு செய்து, வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும், அனைத்து பி.எல்.ஓ.,க்களும் பங்கேற்கும்வகையில், அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் முகாம் நடத்த வேண்டும். படிவங்களை வழங்குவதோடு, பூர்த்தி செய்த படிவங்களையும் பெறலாம். வாக்காளர்களுக்கு, 2002 தீவிர திருத்த பட்டியல் விவரங்களை கண்டுபிடிப்பது, படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கும் பணிகளில், பயிற்சி பெற்ற அரசு அலுவலர்களை நியமிக்கவேண்டும். போதிய விழிப்புணர்வு, வழிகாட்டுதல்கள் இல்லாததால், பெரும்பாலானோர், படிவத்தின் மேல் பகுதியில் உள்ள சுய விவரங்களை மட்டுமே பூர்த்தி செய்து கொடுத்துச்செல்கின்றனர். படிவத்தில் விடுபடுதல் காரணமாக, 2002 பட்டியலில் பெயர் உள்ளவர்களும்கூட, வரைவு பட்டியல் வெளியானபின் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிவரும்; இது, வாக்காளர்களுக்கு மேலும் சிரமத்தை கொடுக்கும். சிறப்பு முகாம் அவசியம் ஜோதிவேல், கருமாரம்பாளையம்: அவிநாசியிலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். காலை 8:15 மணிக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, இரவு வீடு திரும்ப 9:00 மணிக்கு மேலாகிவிடுகிறது. திருப்பூரில் பெரும்பாலான தொழிலாளர்கள் இதே கால நேரங்களில்தான் பணிபுரிகின்றனர். அனைவருக்கும் வீடு தேடிச் சென்று படிவம் வழங்குவது சிரமமானது. தீவிர திருத்த படிவம் வழங்குவது, பூர்த்தி செய்த படிவங்களை பெறுவதற்காக, சிறப்பு முகாம்கள் நடத்தினால், வாக்காாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



ஏமாற்றம்

திருப்பூர் - தாராபுரம் ரோடு, கோவில்வழியில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில், ஐந்து ஓட்டுச்சாவடிகள் உள்ளன. சிறப்பு முகாம் நடப்பதாக அறிந்து, புதுார் ரோடு, பிள்ளையார் நகர், சேரன் நகர் உள்பட சுற்றுப்பகுதி வாக்காளர் பலர் வந்தனர். ஆனால், மூன்று பி.எல்.ஓ.,க்கள் ஓட்டுச்சாவடி மையத்துக்கு வரவில்லை. இதையடுத்து, படிவம் பெறுவதற்காக வந்த வாக்காளர் பலர், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

சுழல வேண்டும்

திருப்பூர் பனியன் நிறுவனங்களில், வெளிமாவட்ட தொழிலாளரே அதிகம் பணிபுரிகின்றனர். சிலர் சொந்த ஊரிலேயே வாக்காளராக தொடர்கின்றனர்; பலர், திருப்பூர் வாக்காளராக மாறிவிட்டனர். இன்னும் சிலர், சொந்த ஊரிலும், திருப்பூரிலும் என இரட்டை பதிவு வாக்காளராக தொடர்கின்றனர். இறந்த வாக்காளர் பலர், வாக்காளர் பட்டியலில் உயிர் வாழ்ந்தகொண்டிருக்கின்றனர். தீவிர திருத்த பணிகளை திறம்பட மேற்கொண்டு, நுாறு சதவீதம் செம்மையான வாக்காளர் பட்டியல் தயாராக, பி.எல்.ஓ.க்கள் முதலான தேர்தல் பிரிவு அதிகாரிகள் அனைவரும் சிறப்பாக சுழல வேண்டும்.






      Dinamalar
      Follow us