/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயிர்ம வேளாண்மை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் வட்டாரம் தோறும் மாதிரி பண்ணைய திடல்
/
உயிர்ம வேளாண்மை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் வட்டாரம் தோறும் மாதிரி பண்ணைய திடல்
உயிர்ம வேளாண்மை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் வட்டாரம் தோறும் மாதிரி பண்ணைய திடல்
உயிர்ம வேளாண்மை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் வட்டாரம் தோறும் மாதிரி பண்ணைய திடல்
ADDED : நவ 29, 2024 10:59 PM

உடுமலை: உயிர்ம வேளாண்மை மீதான விவசாயிகள் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், மாதிரி பண்ணைய திடல் அமைக்கப்பட்டுள்ளது, என உடுமலை வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ், வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு, உயிர்ம வேளாண்மைக்கான மாதிரி பண்ணைய திடல் அமைக்கப்பட்டு வருகிறது.
உடுமலை வட்டாரத்தில், வாளவாடி கிராமம் தேர்வு செய்யப்பட்டு, இயற்கை விவசாயி நடராஜன் தேர்வு செய்யப்பட்டு, விவசாய நிலத்தில் உயிர்ம பண்ணையம் அமைத்து, சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உயிர்ம வேளாண்மையில் விவசாயிகளிடையே ஆர்வத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இயற்கை இடு பொருட்கள், பூச்சி விரட்டிகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள், பெயர்ப்பலகை அமைத்தல், உயிர் உரங்கள், உயிர்ம வேளாண்மை சான்றிதழ் என, விவசாயிகளுக்கு, ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
விவசாயி நடராஜன், மீன் அமிலம், பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், பூச்சி விரட்டி, வேப்பங்கொட்டை கரைசல், தொல்லியல் கரைசல் ஆகியவை தயாரித்து பயிர்களுக்கு பயன்படுத்தி வருவதோடு, செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறார்.
வேளாண் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கூறிதாவது:
இயற்கை வேளாண்மை வாயிலாக, பயிர்ச்சாகுபடியில் உற்பத்தி செலவு பெருமளவு குறைவதோடு, மண் வளம் காக்கப்படுகிறது. நஞ்சில்லா உணவு பொருள் உற்பத்தி செய்ய முடிகிறது.
மீன் அமிலம் : மீன் கழிவு, 10 கிலோ, கரும்புச்சக்கரை, 12 கிலோ மற்றும், 2 லிட்டர் கரும்புச்சாறு கலந்து, காற்று புகாதவாறு, 30 நாட்கள் மூடி நொதிக்க வைத்து, 30 மில்லி எடுத்து, 10 லிட்டர் நீரில் கலந்து பயிர் மீது தெளிக்கும் போது, தழைச்சத்து கிடைக்கிறது.
மேலும் ஒரு ஏக்கருக்கு, 3 லிட்டர் கரைசல் எடுத்து, சொட்டுநீர் பாசனம் வென்சாரி வாயிலாக பயன்படுத்தலாம்.
பஞ்ச காவ்யா : மாட்டுச்சாணம், 10 கிலோவை, அரை லிட்டர் நெய்யுடன் கலந்து, 5 நாட்கள் மூடி வைத்து, அதற்கு பின், தலா, 2 லிட்டர் பால், தயிர், சர்க்கரை, 2 கிலோ, மாட்டு கோமியம், 3 லிட்டர், வழைப்பழம், 10 ஆகியவற்றை கலந்து, தினமும், காலை, மாலை, இரண்டு நேரமும் கலந்து மூடி வைக்க வேண்டும்.
30 நாட்களுக்கு பின், வடிகட்டி, 30 மில்லி கரைசலை, 10 லிட்டர் நீரில் கரைத்து, தெளித்தால் பயிர்களுக்கு மணிச்சத்து கிடைக்கும்.
ஜீவாமிர்தம் : 10 கிலோ மாட்டுச்சாணம், 10 லிட்டர் மாட்டு கோமியம், 4 கிலோ, கரும்புச்சர்க்கரை, நிலத்து மண் ஒரு கைப்பிடி மற்றும் பயறு வகைகள் ஊற வைத்து ஆட்டிய மாவு, 4 கிலோ கலந்து, 2 நாட்கள் கலக்கி வைத்து நொதித்தவுடன் வடிகட்டி எடுத்து, 50 மில்லி கரைசலை, 10 லிட்டர் நீரில் கரைத்து தெளித்தால், பயிர் ஊக்கியாக செயல்படும்.
பூச்சி விரட்டி : 10 இலைகளான, நொச்சி, ஆடாதோடா, காட்டாமணக்கு, வேம்பு, சீதா, துளசி, அரப்பு, நில வேம்பு, துத்தி, எருக்கு இலை ஆகியவற்றை, தலா, அரை கிலோ வீதம் எடுத்து, 10 லிட்டர் மாட்டு கோமியத்தில் கலந்து, 15 நாட்கள், காற்று புகாமல் மூடி ஊற வைத்து, வடிகட்டி, 200 மில்லி கரைசலை, 10 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இம்முறையில், இயற்கை உயிர்ம கரைசல் தயாரித்து, பயன்படுத்தவும், மாதிரி திடலுக்கு வந்து, இயற்கை விவசாயத்தை அறிந்து, மேற்கொள்ளுமாறு, உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.