/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் குழம்ப வேண்டாம்
/
சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் குழம்ப வேண்டாம்
சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் குழம்ப வேண்டாம்
சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் குழம்ப வேண்டாம்
ADDED : நவ 02, 2025 11:27 PM
தமிழகம் முழுவதும், நாளை முதல் தீவிரத் திருத்த பணிகள் துவங்குகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், எட்டு சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 24.27 லட்சம் வாக்காளர் உள்ளனர். தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
தீவிர திருத்தம் குறித்து, அரசியல் கட்சியினர் எழுப்பிய கேள்விகள், வாக்காளர்களுக்கு எழும் சந்தேகங்கள் தொடர்பாக, 'தினமலர்' சார்பில் தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் பதில் பெறப்பட்டது.
யாருக்கு படிவம்?
பி.எல்.ஓ.,க்கள்(ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்) எப்போது வீடு தேடி வருவர்? யார் யாருக்கெல்லாம் தீவிர திருத்த படிவம் வழங்கப்படும்?
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், வரும் 4ம் தேதி (நாளை) துவங்குகிறது. டிச. 4 வரை பி.எல்.ஓ.,க்கள் வீடு தேடிவந்து, படிவம் வழங்கி, பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெறுவர்.
நடப்பாண்டு அக். 27ம் தேதி வரையிலான பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளருக்கும் தீவிர திருத்த படிவம் வழங்கப்படும்.
ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு படிவங்கள் வழங்கப்படும். ஒன்றை பூர்த்தி செய்து, கையெழுத்திட்டு பி.எல்.ஓ., விடம் ஒப்படைக்கவேண்டும். மற்றொன்றை, வாக்காளரே வைத்துக்கொள்ளலாம்.
நீக்கிவிடுவார்களா?
பி.எல்.ஓ., வீடு தேடி வரும்போது, குடும்பத்திலுள்ள அனைத்து வாக்காளரும் இல்லையென்றால், அனைவரையும் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவரா?
பி.எல்.ஓ.,க்கள் மூன்று முறை வாக்காளர் வீடு தேடி வருவார். கதவு பூட்டப்பட்டு வாக்காளர்கள் இல்லை என்றால், அருகாமையில் விசாரிப்பர். மொபைல் எண் பெற்று, தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள். அருகாமையில் உறவினர்கள் இருப்பின், அவர்கள் வாயிலாக விண்ணப்ப படிவங்களை வாக்காளரிடம் சேர்க்கப்படும். நிரந்தரமாக இடம்பெயர்ந்து சென்றிருந்தால், பி.எல்.ஓ., தனது பதிவேட்டில் அவ்விவரங்களை பதிவு செய்வார்; அவை வழங்கப்படாத படிவமாக கணக்கு வைக்கப்படும்.
வாக்காளர் அதே முகவரியில் வசித்தபோதும், பி.எல்.ஓ., வால் தொடர்புகொள்ள இயலவில்லை; படிவம் கிடைக்கவில்லை என்றால் என்னாகும்?
தேர்தல் கமிஷனின் தளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
இறந்தவர் பெயர் நீக்கம்
இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படுமா? என்ன படிவம் கொடுக்கப்போகிறீர்கள்?
இறந்தும் பெயர் நீக்கப்படாத வாக்காளர் உள்பட, பட்டியலில் பெயர் உள்ள அனைத்து வாக்காளருக்கும் தீவிர திருத்த படிவம் வழங்கப்படும். இறந்த வாக்காளரிடமிருந்து, பூர்த்தி செய்த படிவங்கள் திரும்ப வராது. குடும்ப உறுப்பினர்களிடம் விவரம் கேட்டு, பி.எல்.ஓ., தனது பதிவேட்டில் பதிவு செய்வார். இறந்தவர்களின் பெயர், தானாகவே பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடும்.
ஒரு வீட்டில் ஐந்து வாக்காளரில் இரண்டு பேர் ஒருமாதமாக வீட்டில் இல்லை; அவர்களின் படிவத்தை யார் பூர்த்தி செய்து கொடுப்பது?
அப்பா, அம்மா ஆகிய குடும்ப உறுப்பினர் யாரேனும் ஒருவர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கையெழுத்திட்டு கொடுக்கலாம்.
பெயர் இடம்பெறாது
படிவம் பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்து கொடுக்காவிட்டால், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுவிடும்தானே?
படிவம் பூர்த்தி செய்து கொடுக்காத வாக்காளர் பெயர், வரைவு பட்டியலில் இடம்பெறாது. அவர்கள், டிச. 9 முதல் ஜனவரி 31 வரையிலான மேல்முறையீட்டு காலத்தில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பட்டியலில் சேரலாம்.
பி.எல்.ஓ.,க்களுடன் அனைத்து கட்சிகளின் பி.எல்.ஏ., - 2க்கள்(ஓட்டுச்சாவடி முகவர்கள்) உடன் செல்ல அனுமதிக்கப்படுமா?
வாக்காளர்களுக்கு, பி.எல்.ஓ., மட்டுமே படிவம் வழங்குவார். பி.எல்.ஏ.,க்கள், நாளொன்றுக்கு அதிகபட்சம் 50 வீதம் பூர்த்தி செய்த படிவங்களை பெற்று, உறுதி மொழி கடிதம் இணைந்து, பி.எல்.ஓ.,க்களிடம் ஒப்படைக்கலாம்.
வேறு ஆவணம் வேண்டாம்
வேறு மாவட்டத்தில் இருக்கும் பெற்றோரின் வாக்காளர் அட்டை விவரங்களை, மற்றொரு மாவட்டத்தில் வசிக்கும் மகன் அல்லது மகள் குறிப்பிடலாமா?
2002 தீவிர திருத்தத்தில் பெயர் இடம்பெற்று, தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் வசிக்கும் பெற்றோரின் விவரங்களையும், மகன் அல்லது மகள், தனது தீவிர திருத்த படிவத்தில் குறிப்பிடலாம்; அவர்கள் வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்கவேண்டிய அவசியம் ஏற்படாது.
படிக்காத வாக்காளருக்கு உதவி
படிப்பறிவு இல்லாத வாக்காளர்கள் படிவம் பூர்த்தி செய்து வழங்குவதில் சிக்கல் ஏற்படுமே?
அத்தகைய வாக்காளர்கள் படிவம் பூர்த்தி செய்வதற்கு பி.எல்.ஓ.,க்கள், பி.எல்.ஏ., க்கள் உதவி செய்வர்.
மலைவாழ் மக்களிடம் தேர்தல் கமிஷன் குறிப்பிடும் ஆவணங்கள் இருக்க வாய்ப்பில்லை; அவர்கள் என்ன செய்வது?
அனைவரிடமும் நிச்சயம் ஏதேனும் ஒரு ஆவணம் இருக்கும். மலைவாழ் மக்களுக்கு, அரசு வன உரிமைச் சான்று வழங்குகிறது. அதனையே ஆவணமாக இணைக்கலாம்.
தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ள ஆவணங்களில், வாக்காளர் அடையாள அட்டை இல்லையே?
குறிப்பிட்ட நபர் உண்மையான வாக்காளர் தான என்பதை சரிபார்ப்பதற்காகவே இந்த திருத்தம் நடைபெற உள்ளது. அப்படியிருக்கும்போது, வாக்காளர் அட்டையை எப்படி ஆவணமாக சேர்க்க முடியும்.
அச்சம் வேண்டாம்
தீவிர திருத்தத்தால் தங்கள் பெயர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டுவிடுமோ என வாக்காளர் பலர் அஞ்சுகின்றனரே?
தீவிர திருத்தத்தை கண்டு, வாக்காளர் யாரும் வீண் பதற்றமடைய தேவையில்லை. பி.எல்.ஓ.,க்கள் உங்களை தேடி வருவார்கள்; வாக்காளரும், பி.எல்.ஓ.,க்களை அழைத்து விவரம் கேட்டறியலாம்.
தேர்தல் கமிஷனை பொறுத்தவரை, தகுதியுள்ள ஒரு வாக்காளர் கூட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திவருகிறது.
வெற்றிகரமாக நடக்கும்
தீவிர திருத்தத்துக்கு வாக்காளர் எப்படி தயாராகவேண்டும்?
2002 தீவிர திருத்த பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள், உரிய ஆவணங்களை இப்போதை தயார்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும். https://voters.eci.gov.in/ என்கிற தேர்தல் கமிஷின் தளத்தில் சென்று, 2002 தீவிர திருத்த பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா; இல்லையா என கண்டறியலாம். வெளியூர் செல்வோர், உறவினர்கள், அருகாமையில் வசிப்போரிடம் விவரங்களை கூறிவிட்டுச்செல்லலாம்.
வாக்காளர்கள், தங்களுக்கு வழங்கப்படும் தீவிர திருத்த படிவத்தை பூர்த்தி செய்து பி.எல்.ஓ.,விடம் ஒப்படைக்கவேண்டும். 2002 பட்டியலில் பெற்றோர் பெயர் இடம்பெற்றிருப்பின், அவ்விவரங்களை தீவிர திருத்த படிவத்தை குறிப்பிட தவறக்கூடாது. நேர்த்தியான பட்டியல் தயாராகவேண்டும் என்கிற உணர்வோடு, வாக்காளர் அனைவரும் ஒத்துழைத்தாலே போதும், வெற்றிகரமாக தீவிர திருத்தம் நடைபெற்றுவிடும்.

