ADDED : ஜூலை 12, 2026 09:03 AM

திருப்பூர்: 'வெற்றி' அறக்கட்டளை, பல்வேறு இளம் பசுமை அமைப்புகளுடன் இணைந்து, வனத்துறை மற்றும் மத்திய அரசின் வனமரபியல் - மரப்பெருக்கு நிறுவனத்தின் ஆலோசனையை பெற்று, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தாண்டில், 'வனத்துக்குள் திருப்பூர் -12' திட்டத்தில், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன், பசுமை பயணம் துவங்கியுள்ளது. முன்பதிவு செய்த நிலங்களில், குழி தோண்டி, மரக்கன்றுகள் நட்டு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. விவசாயிகளும், மரக்கன்று நட்டு வளர்க்க அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
நகரப்பகுதியில் உள்ள நிலங்கள், கோவில் நிலம், தொழிற்சாலை வளாகங்களிலும், இத்திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், குன்னாங்கல்பாளையத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. ஆனந்தகுமார் - கல்பனா என்பவர்களுக்கு சொந்தமான நிலத்தில், காயா -5,500, சந்தனம் -300, செம்மரம் -100, கொடுக்காப்புளி -4, நெல்லி -4, மாமரம் -2, பலா -2, புளி -2, மலை இலந்தை -2, கொய்யா -2, வாட்டர் ஆப்பிள் -2, எலுமிச்சை -2 என, 5,922 மரக்கன்றுகள் நடப்பட்டது.
'வனத்துக்குள் திருப்பூர் -12' திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
