/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சியில் 'புயல்'; நகராட்சியில் 'துயில்'
/
மாநகராட்சியில் 'புயல்'; நகராட்சியில் 'துயில்'
ADDED : டிச 12, 2024 06:47 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு விவகாரத்தில், அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன; அருகில் உள்ள திருமுருகன்பூண்டி நகராட்சியிலோ 'அமைதி' காக்கின்றன.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஆண்டுக்கு, 6 சதவீதம் வரி உயர்வு, அபராத வரி விதிப்பு போன்றவை, பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என்ற குரல், வலுவாக ஒலிக்க துவங்கியிருக்கிறது.
திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு விவகாரமும், அரசியல் கட்சிகளின் வரிசை கட்டிய போராட்டங்களும் மாநில அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதீத வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளை மாநகராட்சி அ.தி.மு.க.,வினர் பட்டியலிட்டதும், வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு, மறியல், உண்ணாவிரதம் என போராட்ட களத்தை வலுப்படுத்தியதும், மக்களின் கவனத்தை திசை திருப்பியிருக்கிறது. 'இந்த விவகாரம் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது' என்பதை உணர்ந்த தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்., - இ.கம்யூ., - மா.கம்யூ., - வி.சி.க., - முஸ்லிம் லீக் - ம.ம.க., உள்ளிட்ட கட்சிகள்; பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டன. பா.ஜ.,வும் போராட்டக் களம் இறங்கியிருக்கிறது.
பூண்டி நகராட்சி 'பிள்ளையார் சுழி'இதற்கு முன்னதாகவே, திருமுருகன்பூண்டி நகராட்சியில் சொத்து வரி உயர்வு, திருப்பூர் மாநகராட்சியை விட குடிநீர் கட்டண உயர்வு என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, மா.கம்யூ., கவுன்சிலர்கள் கண்டன குரல் எழுப்பினர். இருப்பினும், திருப்பூர் மாநகராட்சியில் தென்பட்ட அதிர்வலை அளவுக்கு அது எடுபடவில்லை. இதற்கு காரணம், பூண்டி நகராட்சியில் உள்ள இரண்டு மா.கம்யூ., கவுன்சிலர்கள் மட்டுமே, சொத்து வரி உயர்வு குறித்து பேசினர்.அங்கு அ.தி.மு.க., மற்றும் இ.கம்யூ., கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், சொத்து வரி உயர்வு விவகாரத்தில் அவர்கள் வரி உயர்வுக்குகெதிராக தங்கள் குரலை ஓங்கி ஒலிக்கவில்லை என்ற கருத்து பொதுமக்களிடம் நிலவுகிறது.
--