/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்க மானிய திட்டம்; விவசாயிகள் பயன்பெற அழைப்பு
/
மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்க மானிய திட்டம்; விவசாயிகள் பயன்பெற அழைப்பு
மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்க மானிய திட்டம்; விவசாயிகள் பயன்பெற அழைப்பு
மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்க மானிய திட்டம்; விவசாயிகள் பயன்பெற அழைப்பு
ADDED : ஜூலை 28, 2025 09:11 PM
உடுமலை; மடத்துக்குளம் வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில், விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக விதைகள் மற்றும் இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது.
மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:
மடத்துக்குளம் வட்டாரத்தில் பிரதானமாக நெல் சாகுபடி உள்ள நிலையில், இதற்கு அடுத்தபடியாக மக்காச்சோளம், ஏறத்தாழ, 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதன் தேவை அதிகரிப்பு காரணமாக, சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.
மக்காச்சோளத்தை பொறுத்தவரை, மக்களிடையே உணவு தானியமாக மிகச்சிறிய அளவிலேயே பயன்பாட்டில் இருந்தாலும், கால்நடைகளுக்கான தீவன உற்பத்தியில், குறிப்பாக கோழித்தீவன உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
தற்போது எத்தனால் தயாரிக்க உதவும் மூலப்பொருளாக, தொழிற்சாலை பயன்பாட்டிற்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு, பெட்ரோலில் எத்தனால் கலப்பு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மக்காச்சோளத்தின் தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், மத்திய, மாநில அரசுகளின் வேளாண் வளர்ச்சித்திட்டத்தில், கடந்த ஆண்டு முதல், இப்பயிர் முக்கிய அங்கம் வகிக்கிறது. தற்போது, விவசாயத்தில் முக்கிய பிரச்னையாக விவசாயத்தொழிலாளர்கள் பற்றாக்குறை பரவலாக காணப்படுகிறது.
இதற்குத்தீர்வாக, விதைப்பு முதல் அறுவடை வரை, குறைந்த தொழிலாளர்கள் பயன்பாட்டை கொண்ட பயிராக இது உள்ளது.
மேலும், விவசாயிகளுக்கு தானியமும், தட்டும் தீவனமாக பயன்பாட்டில் உள்ளதால், விவசாயிகள் இப்பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதற்கு ஏற்ப, வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் அதிக மகசூல் கிடைப்பதோடு, அதிக விலையும் கிடைப்பதால், விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
சிறப்பு வாய்ந்த மக்காச்சோளம் பயிர், இ றவை மற்றும் மானாவாரி சாகுபடிக்கும் ஏற்றதாக உள்ளதால், சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் வகையில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மடத்துக்குளம் வட்டாரத்தில், 440 தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது.
இத்தொகுப்பில் வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதை, நுண்ணுயிர் உரம், பயிர் பாதுகாப்பு மருந்து, நானோ யூரியா மற்றும் இயற்கை உரம் ஆகியவற்றை கொண்ட, 6 ஆயிரம் மதிப்பிலான தொகுப்பு, மானியமாக வழங்கப்படுகிறது.
இத்தொகுப்பு வழங்கும் வகையில், விவசாயிகள் பதிவு துவங்கியுள்ளது. ஒரு விவசாயிக்கு, ஒரு ஹெக்டேர் அளவிற்கு வழங்கப்படுகிறது.
தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள உதவி வேளாண் அலுவலர்களை, ஆதார், சிட்டா, வங்கி பாஸ்புத்தக நகல், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, உதவி வேளாண் இயக்குனர் 70101 57948 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

