/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒற்றைச் சொல் உணர்த்தும் ஓராயிரம் பாடம்!
/
ஒற்றைச் சொல் உணர்த்தும் ஓராயிரம் பாடம்!
UPDATED : செப் 29, 2024 04:20 AM
ADDED : செப் 29, 2024 02:16 AM

''மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்துவதற்கு முதல் தேவை தன்னம்பிக்கை'' என்கிறார் ஆங்கில எழுத்தாளர் சாமுவேல் ஜான்சன்.
'தன்னம்பிக்கை' என்ற ஒற்றை வார்த்தையை மனதில் ஆழ பதித்து, மருத்துவ படிப்பு என்கிற கனவை எட்டிப்பிடித்திருக்கின்றனர், திருப்பூரை சேர்ந்த ஏழை, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாணவ, மாணவியர். மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவு தேர்வெழுதி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், மாவட்டத்தில், 38 பேர் மருத்துவ படிப்புக்குள் நுழைந்திருக்கின்றனர். அவர்களுக்கு 'ஸ்டெதஸ்கோப்' வழங்கும் விழா சமீபத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
மேடையில் பேசியோர் கூறிய நிஜக்கதைகள், மற்ற மாணவர்களின் நம்பிக்கைக்கு புதிய வலு சேர்த்தது.--முயற்சி திருவினையாக்கும்...
கடந்த, 2005ல் நான் அறிவியல், ஆங்கில ஆசிரியராக பள்ளியில் பணிபுரிந்த போது, வசதி, வாய்ப்பில்லாத ஒரு மாணவர் என்னிடம் படித்தார்; அருமையாக படிக்க கூடிய மாணவர் அவர். ஒதுக்குப்புறமான ஒரு கிராமத்தை சேர்ந்தவர். தமிழ் மீடியம் தான் படித்தார். 9 மற்றும், 10ம் வகுப்பை எனது வீட்டில் தங்கி படித்தார். எந்நேரமும் படித்துக் கொண்டே இருப்பார். பத்தாம் வகுப்பில், 486 மதிப்பெண் பெற்றதால், பிளஸ் 1 வகுப்பில், ஒரு தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தோம்.
பள்ளி நிர்வாகம், நன்கொடையாளர்கள் மனமுவந்து அந்த மாணவனின் வளர்சிக்கு உதவினர். 12ம் வகுப்பில், 1,140 மதிப்பெண் பெற்றார். அப்போது 'நீட்' தேர்வு கிடையாது. மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வெழுதினார்; தமிழகத்தில், 36வது மாணவனாக தேறினார். சென்னை மருத்துவக்கல்லுாரியில் மருத்துவ படிப்புக்கு 'சீட்' கிடைத்தது. ஒரு 'அரியர்' கூட வைக்காமல் நல்ல முறையில் படித்து வெளியே வந்தார்.
கடலுார் மருத்துவமனையில் அவருக்கு அரசுப்பணி கிடைத்தது. பின், 'நீட்' தேர்வெழுதி, மதுரையில் எம்.எஸ்., ஆர்தோ படித்தார். இன்று, தாராபுரத்தில், மக்களின் நன்மதிப்பு பெற்ற, பிரபல மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.அவரது நல்ல குணம், விடா முயற்சி உள்ளிட்ட பண்புகளால் நான் ஈர்க்கப்பட்டு, என் மகளையே அவருக்கு மணமுடித்து வைத்து, மருமகனாக்கி கொண்டேன். என் மகளும் எம்.பி.பி.எஸ்., எம்.டி., முடித்துள்ளார். இருவரும் தமிழ் 'மீடியம்' படித்தவர்கள் தான். எனவே, 'மீடியம்' என்பது ஒரு பொருட்டல்ல. கொஞ்சம் முயற்சி இருந்தால் போதும்; சாதிக்க முடியும். எனவே, ஆசிரியர்கள், மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
- காளிமுத்து
மாவட்ட கல்வி அலுவலர்
(கூடுதல் பொறுப்பு)
---
சாமானியரும் சாதிக்கலாம்!
கடந்த, 36 ஆண்டுகளாக, பல நுாறு குழந்தைகளுக்கு கல்வி வசதி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம். எய்ட்ஸ், எச்.ஐ.வி., பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மறு வாழ்வுக்காக பணி செய்து வருகிறோம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு கல்வி புகட்டுவதில் முனைப்புக் காட்டி வருகிறோம்.
உடுமலையில் வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவி, 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றார். அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தோம்; தற்போது மத்திய அரசு தேர்வெழுதி நாக்பூரில் பணியில் சேர்ந்துள்ளார்.
துவக்கமே, 60 ஆயிரம் ரூபாய் சம்பளம். அவரது குடும்பம் உடுமலையில் இருந்து நாக்பூர் சென்றுவிட்டது. எனவே, தமிழ் மீடியம் என்பதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது; கொஞ்சம் உழைக்க வேண்டும். அவ்வளவு தான். வெற்றி கிடைக்கும். எங்கள் நிறுவனம் சார்பில், மாவட்ட கல்வித்துறை ஒத்துழைப்புடன் அவிநாசி, ஊத்துக்குளியில் உள்ள, 20 அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
- சங்கரநாராயணன்
நிர்வாக அறங்காவலர்
என்.எம்.சி.டி., டிரஸ்ட்