/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போர்க்களமாக மாறிய விவசாயிகளின் போராட்டக்களம்!: தடியடி நடத்தி போலீசார் தடாலடி; பொதுமக்கள் அதிர்ச்சி
/
போர்க்களமாக மாறிய விவசாயிகளின் போராட்டக்களம்!: தடியடி நடத்தி போலீசார் தடாலடி; பொதுமக்கள் அதிர்ச்சி
போர்க்களமாக மாறிய விவசாயிகளின் போராட்டக்களம்!: தடியடி நடத்தி போலீசார் தடாலடி; பொதுமக்கள் அதிர்ச்சி
போர்க்களமாக மாறிய விவசாயிகளின் போராட்டக்களம்!: தடியடி நடத்தி போலீசார் தடாலடி; பொதுமக்கள் அதிர்ச்சி
ADDED : பிப் 16, 2025 02:42 AM

திருப்பூர்: தெருநாய்களால் கடிபட்டு இறக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் நடத்திய போராட்டத்தை போலீசார் தடாலடியாக கலைத்து, விவசாயிகளை கைது செய்தனர்; இச்சம்பவம் விவசாயிகள் மத்தியில், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் தெருநாய்கள் கடிப்பதால், ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை பலியாகின்றன; இதுவரை, நுாற்றுக்கணக்கான ஆடு, கோழிகள் இறந்துள்ளன. 'இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நாய்களின் வெறியாட்டம் தொடர்ந்த நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலில், சென்னிமலை - காங்கயம் ரோட்டில், பாரவலசு என்ற இடத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவாக, பி.ஏ.பி., பாசன கிளை கால்வாய் பாதுகாப்பு சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கத்தினர் ஆதரவளித்தனர்.
குளிரையும் பொருட்படுத்தாமல், இரவு முழுக்க விடிய, விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்; நேற்று முன்தினமும் போராட்டம் நீடித்த நிலையில், இரவு, போலீஸ் படை குவிக்கப்பட்டது. விவசாயிகளை தடாலடியாக கலைத்த போலீசார், அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளை துாக்கி வீசினர். மாடுகளுடன் போராட்டத்தில் விவசாயிகள் சிலர் ஈடுபட்ட நிலையில் அவர்களது மாடுகளை, போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சிலரை வலுக்கட்டாயமாக, குண்டுக்கட்டாக துாக்கிச் சென்று, வாகனத்தில் ஏற்றினர். விவசாயிகளின் போராட்டக் களம், போர்க்களம் போல் மாறியது. போலீசாரின் இந்நடவடிக்கை விவசாயிகளை கடும் அதிருப்தியடைய செய்திருக்கிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, விவசாயிகள், ஆலோசித்து வருகின்றனர்.