/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளர் கரங்களில் போனஸ் உள்ளங்களில் பொங்கிய மகிழ்ச்சி
/
தொழிலாளர் கரங்களில் போனஸ் உள்ளங்களில் பொங்கிய மகிழ்ச்சி
தொழிலாளர் கரங்களில் போனஸ் உள்ளங்களில் பொங்கிய மகிழ்ச்சி
தொழிலாளர் கரங்களில் போனஸ் உள்ளங்களில் பொங்கிய மகிழ்ச்சி
ADDED : அக் 26, 2024 10:55 PM

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை மற்றும் சார் நிறுவனங்களில், 95 சதவீத தொழிலாளருக்கு, சம்பளத்துடன் போனஸ் வழங்கப்பட்டது.
கடந்த வார சம்பளத்துடன், பெரும்பாலான தொழிலாளருக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது; விடுபட்ட தொழிற்சாலைகளில், நேற்று, சம்பளத்துடன் போனஸ் தொகையும் சேர்த்து வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த பின்னலாடை தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள், அலுவலர்கள் என, 95 சதவீத பணியாளருக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது. போனஸ் பெற்றதால், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் கூறுகையில், ''அவசர ஆர்டர்களை முடிக்க வேண்டியிருக்கும் நிறுவனங்களில் மட்டும், நேற்று சம்பளம் மட்டும் வழங்கப்பட்டது; நாளை (28ம் தேதி) போனஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, அவசர ஆர்டர் பணியை முடித்துவிட்டு, 29ம் தேதி முதல் விடுமுறை அளிக்க, நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. தொழிலாளர்களை திருப்திப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு வழங்கியதை காட்டிலும், போனஸ் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது,' என்றனர். *வட மாநில தொழிலாளர்
பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளில் பணியாற்றும், வடமாநில தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேலாக பணியாற்றும் தொழிலாளருக்கு, உரிய போனஸ் வழங்கப்பட்டுள்ளது. வெளிமாவட்ட தொழிலாளர் சொந்தஊர் சென்றுவிடுவதால், அவசர பணிகளை முடிக்க, வடமாநில தொழிலாளர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
'கடைசிநேரத்தில்தான்...'
பின்னலாடை தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், பண்டிகைக்கு சில நாட்கள் முன்னதாக போனஸ் வழங்கும் பழக்கம் மாறவில்லை. இதுகுறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளோம். இதுவரை, 95 சதவீத தொழிலாளருக்கு போனஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது. 'பீஸ் ரேட்' தொழிலாளர்களுக்கும், பெயர் அளவுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது,' என்றனர்.
விசைத்தறிக்கு 13.16 சதவீதம்
மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு, 13.16 சதவீதம் வழங்க, தொழிற்சங்கங்கள் பேசி முடிவு செய்யப்பட்டது; அதன்படி, மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளருக்கும் போனஸ் வழங்கப்பட்டது. பாத்திரக்கடை மற்றும் பட்டறை, கோழிப்பண்ணை, சிற்பக்கூடங்கள், கடைகளில் பணியாற்றும் பணியாளர், ஓட்டல் பணியாளர், வெண்ணெய் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர், அரிசி ஆலை, எண்ணெய் ஆலை தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் கரங்களில் போனஸ் தவழ்ந்ததால், இன்று வர்த்தக நிறுவனங்களில் கூட்டம் அலைமோதும் என்று நிறுவனத்தினர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.