/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரங்களில் தவழுது போனஸ் துவங்குது விறுவிறு விற்பனை
/
கரங்களில் தவழுது போனஸ் துவங்குது விறுவிறு விற்பனை
ADDED : அக் 19, 2024 12:42 AM
தீபாவளி என்றாலே, புத்தாடை, பட்டாசு என அமர்க்களப்படும். பின்னலாடை மற்றும் சார் நிறுவனத் தொழிலாளர்கள் பலர், குடும்பத்தினருடன், இவற்றை வாங்குவதற்குத் தயாராகிவருகின்றனர். இவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த போனஸ் பட்டுவாடா துவங்கியிருக்கிறது. குறிப்பாக, இன்றைய சம்பளத்துடன், போனஸ் வழங்க, பெரும்பாலான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
நிட்டிங், பிரின்டிங், கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரிங், சாய ஆலைகள், சிறிய பின்னலாடை நிறுவனங்கள், பவர் டேபிள் நிறுவனங்கள் மட்டுமே, போனஸ் பட்டுவாடாவை துவக்கியிருக்கின்றன. சரஸ்வதி பூஜை நடைபெறும் நாளிலேயே போனஸ் வழங்கப்பட்டு வந்தது. ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டும், வெளிமாவட்ட தொழிலாளர்களை தக்க வைக்க, பண்டிகைக்கு சில நாட்கள் முன், போனஸ் வழங்குவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக, பண்டிகைக்கு முந்தைய வாரத்தில் போனஸ் வழங்குவது வாடிக்கையாகி விட்டது. அதன்படி இன்று தொழிலாளர் கைகளில் போனஸ் தவழும்.
அவசரமாக ஆர்டர்களை முடிக்க வேண்டிய அவசியம் இருக்கும் நிறுவனங்கள் மட்டும், 26ம் தேதி வழங்க திட்டமிட்டுள்ளன.
பண்டிகை நெருங்கும் நிலையில், இரண்டு ஞாயிறு மட்டுமே பாக்கியிருக்கிறது. விடுமுறை நாளான ஞாயிறு அன்று, திருப்பூர் 'பர்ச்சேஸ்' செய்ய, அதிக அளவு மக்கள் வந்து செல்வர். இதனால், திருப்பூரில் மக்கள் கூட்டம் அலைபாயும் நிலை உருவாகும்.